மருந்து, கிருமி நாசினிகளை விநியோகிக்க ஆயுர்வேத திணைக்களம் நடவடிக்கை

259 0

நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்து மற்றும் கிருமிநாசினிகளை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு ஆயுர்வேதத் திணைக்களம் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக, இலங்கை ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் சத்துர குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கு அமைய, ஆயுர்வேத உற்பத்திகளை பொதுமக்களுக்கு மாகாண ஆயுர்வேதத் திணைக்களங்கள் ஊடாக வீடுகளுக்கே விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று ஒழிப்பு தொடர்பில் ஆயுர்வேத மற்றும் சுதேச மருத்துவம் தொடர்பிலான பரிந்துரைக்கு, சுகாதார அமைச்சினால் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினால் ஆயுர்வேத முறையிலான மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

வேப்பிலை மற்றும் தேசிக்காய் இலைகளைப் பயன்படுத்தி புகையிடுமாறு, சுகாதார அமைச்சின் விசேட குழு பரிந்துரை செய்துள்ளது.

இதேவேளை, கொத்தமல்லி, இஞ்சி உள்ளிட்ட மூலிகைகள் அடங்கிய கசாயத்தைப் பருகுவதற்கும் ஆயுர்வேதத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இவை, நோய் எதிர்ப்புச் சக்திக்கு அதிக பலன்களைத் தருவதாக உள்ளன. இந்த மூலிகைகள் அடங்கிய தயாரிப்பொன்றை, ஆயுர்வேதத் திணைக்களம் தற்போது மேற்கொண்டுள்ள நிலையில், அவற்றைப் பக்கெட்டுக்களாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.