அரசாங்க பணத்தை செலவு செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை-ரணில்

213 0

கொரோனா வைரஸ் (கொவிட் 19) நாடு முழுவதும் பரவுவதை தடுப்பதற்கான பூரண திட்டம் ஒன்றை அரசாங்கம் இதுவரை முன்னெடுக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாரிய நிதி நெருக்கடிக்கு உள்ளாகும் நிலைமை தற்போது இலங்கைக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தேர்தல் மீள அறிவிக்கப்படும் வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு பின்னர் அரசாங்க பணத்தை செலவு செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது முதல் கொரோனா வைரஸை தடுப்பதற்காக சுகாதார சேவைகளை மேற்கொள்வதிலும் சிக்கல் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையை கருத்திற்கொண்டு கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றை நடத்துமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்த போதிலும் அரசிடமிருந்து இதுவரையில் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை எனவும் அவர் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.