2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம்!

308 0

1530356907b4எட்டாவது பாராளுமன்றத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட உரை, இன்று பிற்பகல் 2.00 மணியளவில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் வரவு செலவு திட்ட உரையில் குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு,

இலங்கையின் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்த சமூக அபிவிருத்திக்காக பரந்த கொள்கையை அறிமுகம் செய்தல்.

அறிவை மையப்படுத்திய பொருளாதார முறையை ஏற்படுத்துவது அரசின் நோக்கம்.

இந்த முறை வரவு செலவு திட்டத்தில் பொது மக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டுள்ளது. இது வரலாற்றில் முதல் தடவை ஆகும்.

விவசாயம், மரக்கறி மற்றும் பழவகை உற்பத்திக்கு 100க்கு 50 வீத கடன் வட்டி நிவாரணம் வழங்கப்படும்.

தேயிலை, றப்பர், தெங்குக்கான தானியங்கு வர்த்தக பொருள் பரிமாற்ற செயன்முறை. இதற்காக 75 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.

மரக்கறி மற்றும் பழவகைகளை உற்பத்தி செய்வதற்கு, அரசாங்கத்தினால் 20 ஆயிரம் ஏக்கர் காணிகள் வழங்கப்படும். இதற்காக 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாய பொருட்களின் இறக்குமதிக்காக சேர்க்கப்பட்டுள்ள சில வரிகளை நீக்க திட்டமிடப்பட்டுள்ளது.

15 ஆயிரம் உயர்தர பால் மாடுகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை. அதில் 10 மாடுகள் வீதம் ஒவ்வொரு விவசாயிக்கும் வழங்க நடவடிக்கை. இதற்காக 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

400 கிராம் பால்மா பைக்கெட் ஒன்றுக்கு 295 ரூபா கட்டுபாட்டு விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடமேல் மாகாண பல்கலைக்கழகத்தில் உணவு பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது.

விவசாயத்துறை சார்ந்த செலவினங்களுக்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும்.

புதிய தொழில்நுட்பம், காணிகளை விடுவித்தல், பிரதான உணவு உற்பத்தியில் தன்னிறைவை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் விவசாய கூட்டுறவு அமைப்பின் ஊடாக 75 சதவீத வட்டி சலுகை வழங்கும் நோக்கில் 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய நெற் களஞ்சியசாலை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதார ரீதியாக காணப்படும் வித்தியாசம் 2020ஆம் ஆண்டளவில் சீர் செய்யப்படும்.

மீன்பிடித்துறை அபிவிருத்திக்காக ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு 1200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

கோழி இறைச்சிக்கு அதிகூடிய சில்லறை விலை கிலோகிராம் ஒன்றுக்கு 420 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வி அபிவிருத்திக்கு மேலதிகமாக 17,840 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இது 2014ம் ஆண்டை விட 70 வீத அதிகரிப்பாகும். ஆரம்ப பாடசாலைகளின் அபிவிருத்திக்கு 20 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

175,000 உயர்தர மாணவர்கள் மற்றும் 28,000 ஆசிரியர்களுக்கும் இலவச டெப் கணிணி (TAB) வழங்குவதுடன், இதற்காக 5,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வைபை வசதிகளை வழங்குவதற்கு தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்.

வருட இறுதிக்குள் நாட்டில் உள்ள 1000 பாடசாலைகளின் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்காக 3000 மில்லியன் ஒதுக்கீடு.

மேலும் பாடசாலைகளில் வகுப்பறை மற்றும் கட்டிடங்களை கட்டுவதற்காக 21,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் 50 கனணிகளை வழங்க நடவடிக்கை.

விசேட தேவையுடைய சிறார்களுக்கான நாளாந்த கொடுப்பனவு 150 ரூபாவாக அதிகரிப்பு.

5 முதல் 19 வயதுடைய பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் 2 இலட்சம் ரூபா பெறுமதியான காப்புறுதி வழங்க நடவடிக்கை.

பல்கலைக்கழக மாணவர்களின் விளையாட்டு, கலை போன்ற துறைகளுக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

தனியார் நிறுவனங்களின் ஊடாக பட்டப்படிப்பு வழங்குவதற்கு நடவடிக்கை. இதற்காக பல தனியார் கல்வி நிறுவனங்களை நாட்டில் உருவாக்க திட்டம்.

தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் 15,000 மாணவர்களுக்கு 8 லட்சம் ரூபா வரை கடன் உதவி.

தெரிவுசெய்யப்பட்ட பல்கலைக்கழகங்களில் உயர் பெறுபேறுகளைப் பெறும் 3 மாணவர்களுக்கு ஹாவர்ட், கேம்பிரிஜ் மற்றும் எம்.ரி.ஐ. பல்கலைக்கழகங்களில் பட்ட மேற்படிப்பிற்கான புலமைப் பரிசில்கள்.

சர்வதேச மாணவர்களுக்கு 5 வருடத்திற்கான மல்டிபள் என்றி வீசா (Multiple Entry Visa) வழங்கப்படும்.

பல்கலைக்கழக விரிவுரை நேரத்தை இரவு 08 மணிவரை நீடிக்க நடவடிக்கை.

கராப்பிடிய மருத்துவமனையில் பத்து மாடி கட்டிடமொன்றை நிர்மாணிக்க 500 மில்லியன் ஒதுக்கீடு.

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்குவதற்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. வங்கிக்கடன்களில் நூற்றுக்கு 10 வீதத்தை சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு ஒதுக்க திட்டம். இவர்களுக்கு 250 முதல்750 மில்லியன் வரை கடன் வழங்க திட்டம்.

சர்வதேச முதலீடுகளுக்காக ஐந்தாண்டு சலுகை விசா. 250 இற்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்ட வௌிநாட்டு முதலீட்டு நிறுவனங்களுக்கு 3 முதல்5 ஆண்டு வரி நிவாரணம்.

அனைத்து மருந்தகங்களும் பதிவு செய்யப்படுவது கட்டாயம். அனைத்து வர்த்தக நிலையங்களையும் இரவு 11 மணி வரை திறப்பதற்கு யோசனை.

அதி தொழில்நுட்ப இயந்திரங்கள் இறக்குமதிக்காக நூற்றுக்கு 75 வீத வரி நிவாரணம்.

பெரு நகரங்கள் அமைச்சுக்கு 7500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

ஏற்றுமதி இறக்குமதி வங்கி முறை ஒன்றை ஸ்தாபிப்பதற்காக 10,000 மில்லியன் ஒதுக்கீடு.

தெற்கு அதிவேக வீதியை பதுளை வரை விஸ்தரிக்க திட்டம்.

முச்சக்கரவண்டிகள் மூலமான விபத்துக்களை குறைப்பதற்காக புதிய வகை நான்கு சக்கர கார்கள் அறிமுகம். இதற்காக 1000 வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு 50 வீத வட்டி நிவாரணம். இலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வதற்காக 200 மில்லியன் ஒதுக்கீடு.

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேரூந்துகளை ஒன்றிணைந்த கால அட்டவணைப்படி சேவையில் ஈடுபடுத்த தீர்மானம்.

பேரூந்து சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் சுத்திகரிப்பாளர்களுக்காக ஓய்வூதியம் வழங்க திட்டம்.

பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் வேன்கள் 32 ஆசனங்களை கொண்டதாக அமைய வேண்டும். அதனை ஊக்குவிப்பதற்கு வரி நிவாரணம் வழங்கப்படும்.

சிறிய மற்றும் நடுத்தர வர்க்கத்திற்கு 5 இலட்சம் வீடுகள் நிர்மாணிக்க திட்டம். தோட்ட தொழிலாளர்களுக்கு 25,000 வீடுகள் நிர்மாணிக்க திட்டம்.

வடக்கு, கிழக்கில் 50,000 வீடுகள் அமைக்க 5000 மில்லியன் ஒதுக்கீடு. 15 ஆண்டுகளுக்கு மேலாக அரச வீடுகளில் தங்கியிருப்போருக்கு அந்த வீடுகளில் தொடர்ந்தும் வசிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

மாடி வீடுகளைக் கொள்வனவு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு உள்நாட்டு வங்கிகள் ஊடாக 40 வீத கடன் வசதி.

சமூர்த்தி திட்டம், ஜன இசுறு என்று பெயர் மாற்றப்படுவதுடன் சமுர்த்திப் பயனாளிகளின் கொடுப்பனவு அதிகரிக்கப்படும்.

இராணுவத்தினரின் பாதுகாப்பிற்காக 3500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. 12 வருடங்களுக்கு குறைவான சேவைக் காலமுடைய இராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்காக 3500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

திரைப்பட கூட்டுத்தாபனத்திற்காக 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. ஊடகவியலாளர்கள் தொழில்நுட்ப உபகரணங்களை கொள்வனவு செய்ய வட்டியில்லாமல் 03 இலட்சம் ரூபா கடன்.

பாசிப் பயறு கிலோ ஒன்று 15 ரூபாவாலும், பருப்பு 10 ரூபாவாலும், சீனி 2 ரூபாவாலும், சமையல் எரிவாயு 25 ரூபாவாலும், மண்ணென்ணெய் லீற்றருக்கு 5 ரூபாவாலும், நெத்தலி கருவாடு 5 ரூபாவாலும், உருளைக்கிழங்கு 5 ரூபாவாலும் விலைகள் குறைப்பு.

இதேவேளை உள்நாட்டு டின் மீன் 425 கிராம் 125 ரூபா கட்டுப்பாட்டு விலையிலும் உள்நாட்டு பால்மா 400 கிராம் 250 ரூபா கட்டுப்பாட்டு விலை.

இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரை அதிவேக நெடுஞ்சாலை கட்டணத்தில் 50 ரூபாய் குறைக்கப்படும்.