வவுனியா – கனகராயன்குளம் பகுதியில் மர்மப் பொருளைத் தேடி அகழ்வு!

230 0

வவுனியா வடக்கு, கனகராயன்குளம் பகுதியில் வெற்றுக் காணியொன்றில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாகத் தெரிவித்து கடந்த சில தினங்களாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் இன்று சனிக்கிழமை காலை குறித்த பகுதியில் மர்மப் பொருட்களைத் தேடி நிலத்தை தோண்டும் பணிகள் இடம்பெற்றன.

நேற்று காலையிலிருந்து காணியைச் சுற்றி பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் இன்று குறித்த பகுதியில் பொலிஸார், தடவியல் பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர், வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலாளர், புலனாய்வாளர்கள், கிராம சேவையாளர் ஆகியோர் முன்னிலையில் இயந்திரம் மூலம் நிலத்தை தோண்டும் பணி இடம்பெற்றிருந்தது.

சில தினங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் புதையல் தோண்டியதாக சந்தேகத்தின் அடிப்படையில் மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர். ஒருவர் முன்னாள் போராளி என்று தெரிவித்த பொலிஸார் அவர்களிடமிருந்து நிலத்தை தோண்டுவதற்குப் பயன்படும் பிக்கான், அலவாங்கு என்பவற்றுடன் பூசணிக்காய் போன்றவற்றையும் மீட்டிருந்ததாக தெரிவித்திருந்தனர்.

சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் 10 அடி ஆழம் வரை குறித்த பகுதி தோண்டப்பட்டிருந்த போதும் எதுவும் கிடைக்காததனால் பின்னர் மூடப்பட்டது.