தற்போதைய அரசுக்கு ஆதரவளித்தால் தமிழர் பகுதிகளில் இராணுவ காவலரண்களே தலையெடுக்கும் !- செல்வம்

195 0

தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதனூடாக தமிழர் பகுதிகளில் இராணுவ காவலரண்களையும் சோதனைச்சாவடிகளையுமே அதிகரிக்க முடியும் என வன்னிப்பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வட மாகாணம் இன்று இராணுவ பிரசன்னம் அதிகரித்த மாகாணமாக காட்சியளிக்கின்றது. இந்த அரசாங்கம் ஆட்சிப்பீடமேறிய கையோடு அதிகளவான இராணுவ சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தமிழ் மக்கள் நாள்தோறும் இம்சிக்கப்படும் நிலை காணப்படுகின்றது.

வடக்கில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் ஓமந்தை, கொள்ளர் புளியங்குளம், மாங்குளம், ஆனையிறவு என அனைத்து இடங்களிலும் சோதனைக்குட்படுத்தப்படுவதுடன் மக்களும் பேரூந்துகளில் இருந்து இறக்கி ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.

இவ்வாறான நிலையை சிங்களப்பகுதிகளில் செய்வதற்கு இந்த அரசாங்கம் தயாரா? மதவாச்சியில் வைத்து சோதனை செய்து காட்டட்டும். சிங்கள மக்கள் தமக்கு எதிராக கொந்தளிப்பார்கள் என்ற அச்சம் காரணமாகவே இந்த அரசாங்கம் தமிழர் பகுதிகளில் இவ்வாறான இராணுவ சோதனைச்சாவடிக்களை அமைத்து தமிழ் மக்களை இன்னல் படுத்துகின்றது.

எனவே எதிர்வரும் காலங்களில் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவானவர்களையும் அவர்களின் ஆதரவாளர்களையும் மக்கள் பிரதிநிதிகளாக தமிழர்கள் உருவாக்குவார்களேயானால் இராணுவ சோதனைச்சாவடிகளே மிச்சமாக இருக்கும் என்பதனை எமது தமிழ் மக்கள் உணர வேண்டும்.

எப்போதும் தமிழ் மக்களுக்கான துணையாக இருக்கப்போவது தமிழ் தேசியக்கூட்டப்பினரே என்பதனை மக்கள் காலத்திற்கு காலம் உணர்த்தி வரும் நிலையிலேயே தற்போதைய ஆட்சியாளர்கள் தமிழ் மக்களை இராணுவத்தினரை கொண்டு அச்சுறுத்த ஆரம்பித்துள்ளது என அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.