மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

277 0
மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் குறித்த பகுதியை பார்வையிட்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ் லெனின்குமார் அவர்கள் குறித்த விடயம் தொடர்பான வரலாறுகளை சேர்க்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டதோடு குறித்த இடத்தை நாளையதினம் அகழ்வு செய்வதற்கும் உத்தரவிட்டுள்ளார்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக புனர்வாழ்வு வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்ட நிலையில் குறித்த வைத்தியசாலை கட்டடங்களை அமைப்பதற்காக குறித்த காணி துப்புரவு பணிகள் இடம்பெற்று வந்தன.

இதன்போது அங்கு கண்ணிவெடிகள் இருப்பதாக தெரிவித்து அந்த பகுதி மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களினால் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் குறித்த கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் இடம்பெற்று வந்த நிலையில் குறித்த காணியின் ஒரு பகுதியில் மனித எச்சங்கள் காணப்பட்டதை அவதானித்த பணியாளர்கள் மாங்குளம் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மாங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் குறித்த விடயம் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ் லெனின்குமாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இன்று (13) காலை குறித்த இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ் லெனின்குமார் அவர்கள் குறித்த இடத்தை பார்வையிட்டார்.

குறித்த இடத்தை பார்வையிட்ட நீதிபதி குறித்த இடத்தின் ஆரம்பகால வரலாறு தொடர்பாகவும் இந்த விடயம் தொடர்பான வரலாறுகளை ஆராயுமாறு மாங்குளம் போலீசாருக்கு உத்தரவு வழங்கியதோடு நாளைய தினம் குறித்த பகுதியை அகழ்வு பணிகள் மேற்கொள்வதற்கும் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த இடத்தில் மனித எச்சங்கள் மற்றும் சீருடைகளின் பாகங்கள் சிலவும் காணப்படுகின்றன. 2009 க்கு முற்பட்ட காலப்பகுதியை சார்ந்ததாக குறித்த மனித எச்சங்கள் இருக்கலாம் என கருதப்படுகின்றது

குறித்த பகுதிக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி வருகை தந்த நிலையில் குறித்த பகுதியில் புகைப்படம் வீடியோ எடுப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.

குறித்த தனியார் நிறுவனம் தடைவிதித்த நிலையில் தனியார் நிறுவனம் அவர்களுடைய பதிவேட்டில் ஊடகவியலாளரின் பெயரை பதிவு செய்தபோதும் அதன் பின்னர் பொலிஸார் குறித்த இடத்தை வீடியோ எடுப்பதற்கும் ஊடகவியலாளர்கள் செல்வதற்கும் தடை விதித்திருந்தனர்.

சுமார் பத்து நிமிடங்களுக்கு மேல் அனுமதி வழங்கப்படாத நிலையில் ஊடகவியலாளர் நீதிபதிக்கு குறித்த விடயத்தை தெரியப்படுத்திய பின்னர் நீதிபதியின் உத்தரவிற்கு அமைய ஊடகங்களுக்கு வீடியோ புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.