வவுனியா சோதனைச் சாவடிகளால் பயணிகள் அசௌகரியம்

304 0

வவுனியாவில் இரண்டு இடங்களில் இராணுவம் மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளால் பயணிகள் பெரும் அசளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

அண்மைய நாட்களில் யாழ் மாவட்டத்தில் இருந்து தென் பகுதிக்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக தெரிவிக்கப்படும் நிலையிலேயே இச் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

புதூர் மற்றும் ஓமந்தைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இச் சோதனையின் போது பேரூந்துகளில் இருந்து வரும் பயணிகள் பகல் இரவு நேரங்களிலும் கீழே இறக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்படுகின்றனர்.

அதற்குமப்பால் புதூர் பிரதேசத்தில் சில மீற்றர் தூரம் நடந்து சென்றே மீண்டும் பேரூந்தில் ஏறிச்செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இரவு நேரங்களில் தூர இடங்களுக்கு செல்பவர்கள் பெரும் அசளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இவ்வாறு சோதனைகளின் போது போதைப்பொருள் மீட்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் முக்கியமாக பெருந்தொகையான போதைப்பொருள் கடத்தப்படும் மார்க்கங்கள் தொடர்பில் இதுவரை பாதுகாப்பு தரப்பினர் கவனம் செலுத்தாது பயணிகளை அசௌகரியத்திற்குள்ளாக்குவதாகவும் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.