கறுப்புக்கொடிகளை பறக்கவிட்டு சிறிலங்கா சுதந்திரதினத்தை எதிர்க்கும் யாழ். பல்கலைக்கழகம்

301 0

 

யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கறுப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளன. இலங்கையின் 72வது சுதந்திர தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே பல்கலை வளாகத்தில் கறுப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளன. அத்துடன் பதாதை ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பாதாதையில், “ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரம் ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு மாற்றப்பட்டு அதன் ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தல் வேண்டும்.

கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படல் வேண்டும். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உள்ளக விசாரணை மூலம் நீதி கிடைக்காது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திரதினத்தை கரிநாளாக அறிவித்து வடகிழக்கில் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு முழமையான ஆதரவைத் தெரிவித்துக்கொள்வதுடன், அந்தப் போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொண்டு வலுச்சேர்க்குமாறும் நேற்றையதினம் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.