தமிழகத்திலேயே முதல்முறையாக போலீஸ் நண்பர்கள் குழுவில் பெண்கள்

315 0

தமிழகத்திலேயே முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் நண்பர்கள் குழுவில் பெண்கள் இணைக்கப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையின் சார்பில் போலீஸ் நண்பர்கள் குழு ஏற்கெனவே செயல்பட்டு வருகிறது. இக்குழு தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், இதில் இதுவரை 354 பேர் இணைந்துள்ளனர். இக்குழுவில் தமிழகத்திலேயே முதல் முறையாக தற்போது 8 பெண்கள் இணைக்கப்பட்டுஉள்ளனர்.

இதன் அறிமுக விழா நேற்றுமுன்தினம் காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி பங்கேற்று கல்லூரி மாணவ – மாணவியருக்கு போலீஸ் நண்பர்கள் குழுவின் பணிகள் குறித்தும், கல்லூரி மாணவர்கள் காவல்துறையுடன் இணைந்து எவ்வாறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவது என்பது குறித்தும் விளக்கம் அளித்தார்.

இந்த விழாவில் அவர் பேசியதாவது: காஞ்சிபுரம், பெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கலைக் கல்லூரி, மற்றும் பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 8 மாணவிகள், 346 மாணவர்கள் என 354 பேர் போலீஸ் நண்பர்கள் குழுவில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலேயே காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் நண்பர்கள் குழுவில்தான் முதல்முறையாக பெண்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

இக்குழுவில் இணைந்துள்ள மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, டி-ஷர்ட் போன்றவற்றை தவறாக பயன்படுத்தக் கூடாது. தவறாக பயன்படுத்துவது தெரிந்தால் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு சேர்ந்துள்ள மாணவர்கள் காவல்துறையினருக்குதான் நண்பர்களாக இருக்க வேண்டும். போலீஸார் உங்களை பிடிக்க வருகிறார்கள் என்று குற்றவாளிக்கு தகவல் கொடுக்கக் கூடாது என்றார். இதைத் தொடர்ந்து போலீஸ் நண்பர்கள் குழுவில் இணைந்தோர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

இவ்விழாவில் கூடுதல் காவல்கண்காணிப்பாளர் பாலச்சந்திரன், காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் கலைச்செல்வம், அருள்மணி மற்றும் காவல்துறை ஆய்வாளர்கள், கல்லூரி முதல்வர்கள், மாணவ – மாணவியர் உட்பட பலர் பங்கேற்றனர்.