யாழ்ப்பாணம், சுண்டுக்குளியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 142 கிலோ கிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன், அதனைப் பதுக்கி வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் குடும்பத் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சுண்டுக்குளி, பழைய பூங்கா வீதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று (29) இரவு இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் சிறப்பு பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் வீட்டை முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இதன்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன. அவற்றின் நிறை 142 கிலோ 945 கிராம் என எடையிடப்பட்டுள்ளது.
இவை சுமார் 1 கோடியே 50 லட்சம் பெறுமதி என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதனை வீட்டில் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் 33 வயதுடைய குடும்பத் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கொழும்பில் வசித்துவிட்டு திருமணத்தின் பின் குறித்த விலாசத்தில் வசித்து வருகிறார்.
சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கஞ்சா போதைப் பொருளும் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

