கிளிநொச்சியில் புதிய மா இனம் ஒன்று அறிமுகம் !

246 0

புதிய வகை மா இனம் ஒன்று ஆராச்சியின் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என கிளிநொச்சி பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம், மேலதிகப்பணிப்பாளர் ; கலாநிதி.சி.ஜே.அரசகேசரி, தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தப்பிப்பிழைத்திருக்கும் பல்லாண்டு தாவரங்களை இனங்கண்டு அவ்வாறு இனங்காணப்பட்ட தாய்த்தாவரங்களை குறிப்பிட்டு, அவற்றை நாற்றுக்கள் தயாரிப்பாளர்களுக்கு வழங்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதற்காக மாகாண விவசாயத்திணைக்களத்தினருடன் இணைந்து திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலையத்தினர் மாவட்ட செயலகத்தின் நிதியுதவியுடன் 2005,2006 ஆம் ஆண்டுகளில் ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தனர். இவ் ஆய்வில் பலதரப்பட்ட மாங்கன்றுகளும், பலாக்கன்றுகளும் தாவரரீதியில் ஆராயப்பட்டு சிறப்பான கன்றுகள் தெரிந்தெடுக்கப்பட்டது.

கறுத்தக்கொழும்பான் மா இனத்தில், பழத்தில் உள்ள நார்பற்று, தோலின் நிறம், பழத்தின் இனிப்புச்சுவை, வாசம் போன்றன கருத்திலெடுக்கப்பட்டு மூன்று தாய்த்தாவரங்கள் தெரிந்தெடுக்கப்பட்டன. அவ்வாறே விழாட் இனத்தில் இரண்டு இனங்கள் தெரிந்தெடுக்கப்பட்டன. அத்தோடு இவ் ஆய்வின் போது எதேச்சையாக புதியதொரு குணாம்சங்களுடன் ஒரேவகையான இரண்டு தாய்தாவரங்கள் கண்டறியப்பட்டன. அவற்றை ஆராய்ந்தபோது இப்பழங்கள் தனித்தன்மை வாய்ந்ததாக இருந்தன. இப்பழமும் மரமும் மேலும் ஆய்விற்குட்படுத்தியதன் விளைவாக ஏனைய பழமரங்களின் குணாம்சங்களைவிட பலவகையில் வேறுபட்டதாக காணப்பட்டது.

பழங்களின் வடிவம், பருமன், சதைப்பற்று, நார்பற்று, சுவை மற்றும் தனித்துவமான நறுமணம் என்பன துல்லியமான வேறுபாடுகளைகாட்டி நின்றன. இவ் ஆராய்ச்சியின் விளைவாக இத்தாய்த்தாவரத்திலிருந்து ஒட்டுக்கிளைகள் கொண்டுவரப்பட்டு கன்றுகள் உருவாக்கப்பட்டது. விவசாய ஆராய்ச்சி நிலையத்திலும், மாவட்ட விவசாயப்பண்ணையிலும் கன்றுகள் நாட்டப்பட்டன. அக்கன்றுகள் வளர்ந்து தற்போது காய்த்துக் குலுங்குகின்றன. இம்மரத்தின் கிளைகள் கீழ்நோக்கி வளர்ந்திருப்பதனால் படரும் செடியைப்போல் காட்சியளிக்கின்றது. இதனால் உருவாக்கப்பட்ட இவ் இனக்கன்றுகளை நாட்டிய விவசாயிகள் இவ் இனத்தை ‘கொடிமா’ என பெயரிட்டுள்ளனர்.

மேலும் நடைபெற்ற ஆராய்ச்சிகளின் விளைவாக இவ்வினம் வருடம்பூராக காய்க்கும் தன்மை கொண்டதாகவும் போதுமானவளவு குறிப்பிடக்கூடியளவு பழச் சாற்றைக்கொண்டதுடன் விசேடித்த நறுமணமுள்ள சதைப்பற்றுடன் சாதாரண பருமனை கொண்டபழமாக அறியப்பட்டது. ஒவ்வொரு பழமும் சராசரியாக 280 தொடக்கம் 450 கிராம் நிறை வரை இருந்துள்ளது. பழுக்கும் போது பழம்பூராகவும் மஞ்சள் நிறமாவதுடன் பார்வைக்கு மிகவும் அழகானதாகவும் தென்படும். நன்றாக பழுத்த மாம்பழங்களை 3-5 நாட்கள் வரை பழுதடையாமலும் பாதுகாக்கலாம். மேலும் இம்மாங்கன்றுகள் வீட்டுத்தோட்ட வளர்ப்பிலும் வறள்நில பிரதேசங்களிலும் நல்லபயனைத்தரும் என நிருபனமாகியுள்ளது.

கடந்த 09.01.2020 அன்று விவசாயத்திணைக்களத்தின் தலைமைக்காரியாலயத்தில் ;நடைபெற்ற இன வெளியீட்டுகுழுவின் வருடாந்த கூட்டத்தில் (2019 இற்கான) அங்கு கூடியிருந்த திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் பல்கலைகழக பேராசிரியர்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கு கூடியிருந்த அநேகரின் சரிபார்த்த பின்னர் இப்புதிய மா இனம் வெளியிடப்பட்டுள்ளது. இவ் ஆராய்ச்சியில் வெற்றிகண்ட கலாநிதி.சி.ஜே.அரசகேசரி, மேலதிகப்பணிப்பாளர் (ஆராய்ச்சி) அவர்கள் இப்புதிய மா இனத்தை திருநெல்வேலி மஞ்சள் என அழைக்கலாம் என பரிந்துரைத்துள்ளார்.

ஏற்கனவே வெளியிடப்பட்ட திருநெல்வேலி வெள்ளை (பாகல்), திருநெல்வேலி நீளம் (புடோல்), திருநெல்வேலி நாவல் (கத்தரி), திருநெல்வேலி சிவப்பு (சின்னவெங்காயம்), போன்ற வரிசையில் இம் மா இனமும் திருநெல்வேலி மா 01 என பெயரிடப்பட்டுள்ளது

இம் மா இனத்தை உருவாக்க உதவிய அனைத்து தரப்பினருக்கும் மாகாணசபை விவசாய உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் ஏனைய விஞ்ஞானிகளுக்கும் இக்கருத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்கிய அப்போதைய அரசாங்க அதிபர் மதிப்பிற்குரிய திரு.கணேஷ் அவர்களுக்கும் கலாநிதி.சி.ஜே.அரசகேசரி, மேலதிகப்பணிப்பாளர் (ஆராய்ச்சி) அவர்கள் நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.

இப்புதிய மா இனத்தில் கன்றுகள் இப்போது உருவாக்கப்பட்டுக்கொண்டிருப்பதனால்; கூடியகெதியில் இவ்வினத்தின் விவசாயிகளுக்கு கன்றுகள் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே வெளியிடப்பட்ட திருநெல்வேலி வெள்ளை (பாகல்), திருநெல்வேலி நீளம் (புடோல்), திருநெல்வேலி நாவல் (கத்தரி), திருநெல்வேலி சிவப்பு (சின்னவெங்காயம்), போன்ற வரிசையில் இம் மா இனமும் திருநெல்வேலி மா 01 என பெயரிடப்பட்டுள்ளது.

இம் மா இனத்தை உருவாக்க உதவிய அனைத்து தரப்பினருக்கும் மாகாணசபை விவசாய உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் ஏனைய விஞ்ஞானிகளுக்கும் இக்கருத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்கிய அப்போதைய அரசாங்க அதிபர் மதிப்பிற்குரிய திரு.கணேஷ் அவர்களுக்கும் கலாநிதி.சி.ஜே.அரசகேசரி, மேலதிகப்பணிப்பாளர் (ஆராய்ச்சி) அவர்கள் நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.

இப்புதிய மா இனத்தில் கன்றுகள் இப்போது உருவாக்கப்பட்டுக்கொண்டிருப்பதனால்; கூடியகெதியில் இவ்வினத்தின் விவசாயிகளுக்கு கன்றுகள் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.