பாலமேடு ஜல்லிக்கட்டு- சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டு அடக்கிய வீரர்கள்

226 0

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. சீறிப்பாய்ந்த காளைகளை திடலில் காளையர்கள் போட்டி போட்டு அடக்கினர்.

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு அடுத்தபடியாக சிறந்தது பாலமேடு ஜல்லிக்கட்டு. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு திருவிழாவை காண சுற்றுவட்டார கிராம மக்கள் மட்டுமின்றி மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வருவதுண்டு.

இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு இன்று பாலமேட்டில் தொடங்கியது. இதனால் கடந்த சில நாட்களாக பாலமேடு களைகட்டி காணப்பட்டது.

காளைகள், காளையர்கள் பதிவு விறுவிறுப்பாக ஒருபுறம் நடக்க, ஜல்லிக்கட்டு திடலில் காலரி அமைப்பு உள்ளிட்ட பணிகள் மறுபுறம் நடந்தன.

முழு ஏற்பாடுகளும் முடிவடைந்த நிலையில் ஜல்லிக்கட்டு திடலில் வாடிவாசலின் முன்பு தென்னை நார்கள் இரவில் பரப்பப்பட்டன. போட்டியில் பங்கேற்கும் காளைகள் திருச்சி, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து நேற்று இரவே வேன், லாரிகளில் பாலமேடு அழைத்து வரப்பட்டன.

இன்று காலை 6 மணி முதலே, ஜல்லிக்கட்டு நடைபெற்ற மஞ்சள்மலை சாமி ஆற்றுதிடல் மக்கள் வெள்ளத்தால் நிறைந்து காணப்பட்டது. வாடிவாசல் முன்பு காளையர்களும், கேலரிகள், தடுப்பு வேலிக்கு பின்புறம் பார்வையாளர்கள் நின்றனர். வாடிவாசலுக்கு பின்புறம் காளைகள் பாய்வதற்கு தயார் நிலையில் நின்றன. முன்னதாக காளைகளுக்கும், காளையர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான ஒருங்கிணைப்புக்குழு முன்பாக மாவட்ட கலெக்டர் வினய் உறுதிமொழி வாசிக்க, அதனை மாடுபிடி வீரர்கள் ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கின. முதலில் போட்டியை நடத்தும் கிராம பொதுமகாலிங்கசாமி மடத்துக்கமிட்டி சார்பில் கோவில் காளை களம் இறக்கப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை.

அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட 700 காளைகளும் ஒவ்வொன்றாக வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்தன. அதனை வீரர்கள் பாய்ந்து பிடித்தனர். பதிவு செய்யப்படட 936 வீரர்களில் முதல் சுற்றில் 75 வீரர்கள் களம் இறக்கப்பட்டனர். துள்ளிக்குதித்து வந்த காளைகளின் திமில்களை வீரர்கள் பாய்ந்து பிடித்தனர்.

அப்போது சில காளைகள் சுழன்று சுழன்று வந்தபோதும் திமிலை விடாத வீரர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.

இதேபோல் சில காளைகள் யாருக்கும் பிடிபடாமல் சீறிப்பாய்ந்து நிற்காமல் சென்றன. இன்னும் சில காளைகள் களத்தில் நின்று காளையர்களை கலங்கடித்தன. இந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பரிசு பொருட்களுடன் செல்லும் வெற்றி பெற்ற வீரர்

காளைகள் வாடிவாசல் வழியாக வரும் முன்பே அது யாருடைய காளை, அதற்கான பரிசுப்பொருட்கள் என்ன என்பதும் அறிவிக்கப்பட்டன. அதேபோல் காளைகளை பிடித்த வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் ஜல்லிக்கட்டு திடலில் உட னுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டன.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாணிக்கம் எம்.எல்.ஏ. உள்பட பலர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து ரசித்தனர். அவர்கள் அவ்வப்போது பரிசுகளை தங்கள் சொந்த செலவில் அறிவித்து காளைகளின் உரிமையாளர்களையும், காளையர்களையும் உற்சாகப்படுத்தினர்.

பல்வேறு வர்த்தக நிறுவனங்களின் சார்பிலும் பரிசுகள் வழங்கப்பட்டன. தங்கம், வெள்ளிக்காசுகள், சைக்கிள், அண்டா, கட்டில் என பல பரிசுகள் வழங்கப்பட்டன.

கலெக்டர் வினய், தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், டி.ஐ.ஜி. ஆனி விஜயா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் தலைமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.