கூட்டமைப்பு சண்டித்தனம் காட்டாது புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும் – டிலான்

285 0

தேசிய இனப்பிரச்சினை க்கு அரசியல் தீர்வு வேண்டுமாயின்  தமிழ் தேசியக்கூட்டமைப்பு தற்போதைய அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள மக்கள்  ஆணையின் தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும்.  எனவே தமிழ் கூட்டமைப்பு கடந்த காலங்களைப் போன்று சண்டித்தனம் காட்டா மல் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வதே பொருத்தமானதாக அமையும் என்று  ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்

அரசாங்கத்தை தீர்மானிக்க முடியும் என்ற கூட்டமைப்பின்   எண்ணம்  இம்முறை பிழைத்துவிட்டது. எனவே அந்த யதார்த்தைப் புரிந்துகொண்டு கூட்டமைப்பு செயற்பட வேண்டும். மாறாக கடந்த காலங்களைப் போன்று  சண்டித்தனம் காட்ட முற்படுவது   சானக்கியமாக அமையாது என்றும் அவர்   குறிப்பிட்டார்.

தேசிய பிரச்சினைக்கான  அரசியல் தீர்வு மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் அரசாங்கமும்  பேச்சுவார்த்தை நடத்துமா என்ற விவகாரம் போன்றன தொடர்பில்   கருத்து வெளியிடுகையிலேயே டிலான் பெரேரா இதனைக் குறிப்பிட்டார்.

அவர்  இது தொடர்பில்   மேலும் குறிப்பிடுகையில்;
கடந்த தேர்தலில்  இந்த நாட்டு மக்கள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கு    வழங்கிய  மக்கள் ஆணை என்ன என்பதை தமிழ் தேசியக்கூட்டமைப்பு  இன்னும் புரிந்தகொள்ளவில்லை என்றே தெரிகிறது.

சிறுபான்மை மக்கள் இனரீதியாக  பிரிந்து அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக மாறினால் நாங்களும்  அவ்வாறு செய்ய தயார் என்று  சிங்கள பெளத்த மக்கள் கடந்த தேர்தலில்  ஒரு செய்தியை வழங்கியிருக்கின்றனர். தொடர்ந்தும் இவ்வாறு இனவாத   ரீதியில்  செயற்பட முடியாது என்பதை சிங்கள பெளத்த மக்கள் அறிவித்திருக்கின்றனர். எனவே இந்த யதார்த்தத்தை  நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
பொதுவாக நான் அதிகாரப்பகிர்வை விரும்புகின்றவன். ஆனால் இம்முறை தேர்தலில்  பெரும்பான்மை மக்கள் வழங்கியுள்ள மக்கள் ஆணையை  புரிந்துகொண்டே  நானும் செயற்படவேண்டியிருக்கிறது.
அதேபோன்று   தமிழ் தேசியக்கூட்டமைப்பும்    இந்த  மக்கள் ஆணையை புரிந்துகொள்ளவேண்டும்  ஆனால்   கூட்டமைப்பு இந்த ஆணையை  புரிந்துகொண்டதாக தெரியவில்லை.      கடந்த   நான்கரை வருடகாலத்தில்   தமிழ் தேசியக்கூட்டமைப்பு காட்டிய சண்டித்தனத்தை  தற்போது காட்ட முடியாது.  அந்த சண்டித்தனத்திற்கு அரசாங்கம்  அடிபணியாது.

எனவே  யதார்த்தத்தையும் மக்கள் ஆணையும் புரிந்து கூட்டமைப்பு செயற்படுவது அவசியம்.  அதாவது   மக்களினால் வழங்கப்பட்டுள்ள ஆணையை  புரிந்துகொண்டு கூட்டமைப்பு  புத்திசாலித்தனமாக  செயற்படவேண்டும்.   அவ்வாறு  செய்வதே  தற்போது பொருத்தமானதாக அமையும்.     எங்களால் மட்டுமே ஆட்சியை தீர்மானிக்க முடியும் என்ற   கடந்தகால சண்டித்தனத்தை    கைவிட்டு   கூட்டமைப்பு   புத்திசாலித்தனமாக   செயற்படுவது கட்டாயமாகும்.

தேசிய பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வைப் பெறவேண்டுமாயின்   இவ்வாறு கூட்டமைப்பு சண்டித்தனத்தை கைவிட்டு  புத்திசாலித்தனமாக  செயற்படவேண்டியது  முக்கியமாகும்.  அதனூடாகவே வெற்றிகளை   பெறமுடியும். இதனை தமிழ் கூட்டமைப்பு   புரிந்துகொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம். மாறாக  கூட்டமைப்பு தொடர்ந்தும்  சண்டித்தனத்துடனும் இனவாதப்போக்குடனும்   செயற்பட முயற்சித்தித்தால் அது பொருத்தமாக அமையாது என்றார்.