சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெண்கள் கல்லூரியில் இன்று காலை பேராசிரியை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ளது டி.ஜி.வைஷ்ணவா பெண்கள் கல்லூரி.
இங்கு பேராசிரியையாக பணிபுரிந்தவர் தனலெட்சுமி. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து நின்றுவிட்டார். ஆனால், அடிக்கடி கல்லூரிக்கு வந்து செல்வார். இன்று காலையிலும் எப்போதும் போல தனலெட்சுமி கல்லூரிக்கு வந்தார்.
திடீரென தான் பாடம் நடத்திய முதல்மாடி வகுப்பறைக்கு சென்றார்.
தனது கைகளை பிளேடால் கிழித்த தனலெட்சுமி மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இன்று காலையில் மாணவிகள் வந்த பிறகுதான் அவர் தற்கொலை செய்தது தெரிய வந்தது.
வகுப்பறைக்கு சென்ற மாணவிகள் பேராசிரியை தனலெட்சுமி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் அரும்பாக்கம் போலீசார் விரைந்து சென்று தனலெட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த தற்கொலை சம்பவம் கல்லூரியில் பணியாற்றும் மற்ற பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கல்லூரி முன்பு பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் பரபரப்பு நிலவியது.

