சுவிஸ் தூதரக சம்பவம் திட்டமிட்ட நாடகம் -அமரவீர

179 0

சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் முற்று முழுதாக திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நாடகமெனவும்  இது நாடகம் என்பதற்கான ஆதாரங்கள் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளதாவும் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறுகின்றார்.

எனினும் சுவிஸ் தூதரகம் ஏன் இதனை செய்தது இந்த நாடகத்தின் பின்னணியில் உள்ள சூழ்ச்சிக்காரர்கள் யார் என்பதை கண்டறியவேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆளும் கட்சி குழுக் கூட்டம் நேற்று இரவு அலரிமாளிகையில் கூடியது.

கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்இ

சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கடத்தப்பட்ட விவகாரம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பல உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக  இந்த சம்பவம் முற்று முழுதாக திட்டமிடப்பட்டு நகர்த்தப்பட்ட நாடகமாகும்.  இது ஒரு நாடகம் என்பதற்கான  சாட்சியங்களுடன் எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்த சூழ்ச்சியின் பின்னணியில் யார் இருப்பது என்பதை மட்டுமே இப்போது  நாம் கண்டறிய வேண்டியுள்ளது.

இந்த சம்பவம் முற்று முழுதாக நாடகம் என்பது எமக்கு நன்றாகவே தெரிந்த ஒன்றாகும். ஆகவே அரசாங்கமாக நாம் இந்த சம்பவம் குறித்து கவனமாக அவதானித்து வருகின்றோம்.

எனினும் சுவிஸ் தூதரகம் இதனை செய்ய காரணம் என்ன? இதன் பின்னணியில் யார் இவ்வாறு செயற்பட்டது. அவர்களின் உண்மையான நோக்கம் என்ன என்பதை கண்டறிய வேண்டும் என்பதை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கத்தை பலவீனப்படுத்த செய்யப்பட்ட ஒரு விடயமே இது. அதற்கான சாட்சிகள் உள்ளது. அதேபோல் குற்றப்புலனாய்வு பிரிவு இப்போதும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களுக்கு இடமளித்து நாம் தலையிடாது பார்த்துக்கொண்டுள்ளோம். விரைவில் உண்மைகள் வெளிவரும் என்றார்.