அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட அனைவரும் தத்தமது பொறுப்புகளை நிறைவேற்றி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என ஜனாதிப்பதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.
புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் நியமனத்தை தொடர்ந்து அங்கு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,”மக்கள் பாரிய எதிர்பார்ப்புகளுடனேயே எமக்கு வாக்களித்துள்ளனர். இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு எமக்கு விருப்பம் இருந்தது.
ஆனால் எமது கொள்கை பிரகடனம் தொடர்பாக பார்க்கும்போது எமக்கு அதிகளவான பொறுப்புகள் உள்ளன. அதன் காரணமாகவே, அதே விதத்தில் பதவிகளை வழங்குவதற்கு தீர்மானித்தோம்.
தமக்கு கிடைத்த அமைச்சு பதவி தொடர்பில் சந்தேகங்கள் இருக்கலாம். எனினும், பொறுப்புகள் அதிகம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். மக்களின் தேவைகளைப் பார்த்து இந்த அமைச்சு பதவிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக ரயில் சேவை இராஜாங்க அமைச்சு பதவியை எடுத்துக்கொண்டால், இன்று ரயில் சேவை தொடர்பாக பாரிய தேவைப்பாடுகள் காணப்படுகின்றன.
பதவிகள் கிடைக்காவிட்டாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் நிறைவேற்றக்கூடிய பொறுப்புகள் உள்ளன. அந்த பொறுப்புகளை நிறைவேற்றி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்” என அவர் கூறினார்.

