வடக்கு ஆளுநர் நியமனத்துக்கான தாமதமே எனது சத்தியப் பிரமாணத்துக்கு தாமதம்- திஸ்ஸ

331 0

வடமாகாணத்துக்கான ஆளுநர் நியமனத்தில் ஏற்பட்டிருக்கும் தாமதத்தினாலே ஏனைய இரண்டு மாகாண ஆளுநர்களும் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

ஜனாதிபதி கோத்தாய ராஜபக்ஷ் கடந்த வாரம் நாட்டில் இருக்கும் 9 மாகாணங்களில் 6 மாகாணங்களுக்கான ஆளுநர்களை நியமித்திருந்தார். அந்த ஆளுநர்கள் தற்போது அவர்களின் கடமைகளை பொறுப்பெடுத்து செயற்பட்டு வருகின்றனர். எஞ்சியிருக்கும் மூன்று மாகாணங்களுக்கான ஆளுநர்களாக யாரை நியமிப்பதென்ற தீர்மானம் எடுப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டிருந்தது.

என்றாலும் கிழக்கு மாகாண ஆளுநராக என்னை நியமிப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.அதன் பிரகாரம் எனக்கான நியமனக்கடிதமும் தயாரிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதும் ஆளுநர்கள் நியமிக்கப்படவிருக்கும்  வடமத்திய மற்றும் வட மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்பட்ட பின்னர் மூன்றுபேரும் ஒரேதடவையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளுமாறு ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். அதனால்தான் நான் சத்தியப்பிரமானம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.