சஜித்தின் ஹெலி தரையிறங்கயிருந்த பகுதியில் மின்சாரம் துண்டிப்பு- சதி என ஐ.தே.க குற்றச்சாட்டு

311 0

குருநாகலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தடுப்பதற்கான சதி முயற்சிகள் இடம்பெற்றதாக ஐக்கியதேசிய கட்சி குற்றம்சாட்டியுள்து.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரேமதாசவின் ஹெலிக்கொப்டர் தரையிறங்குவது சதி முயற்சிகளால் பாதிக்கப்பட்டதாக ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.

குருநாகலில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் அசோக்க அபயசிங்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சஜித்பிரேமதாச பயணித்த  ஹெலிக்கொப்டர் தரையிறங்குவதற்கு பல தடவை முயற்சிகளை மேற்கொண்டது ஆனால் அந்த பகுதி முழுவதும் வெளிச்சமற்று கடும் இருளாக காணப்பட்டதால் அது சாத்தியமாகவில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் சஜித் பிரேமதாச இல்லாமலே பிரச்சார கூட்டத்தை நடத்தவேண்டிய நிலையேற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சஜித்பிரேமதாசவின் ஹெலிக்கொப்டர் தரையிறங்குவதற்கு முன்னதாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என இணையமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஹெலிக்கொப்டர் தரையிறங்கயிருந்த பகுதிக்கான மின்சாரத்தை குருநாகல் மாநாகர சபை துண்டித்தது இதனால் சஜித் பிரேமதாசவின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவானது என அவர் தெரிவித்துள்ளார்.

இறுதியில் குருநாகல் பிரச்சாரத்தை ஜனாதிபதி வேட்பாளர் கைவிடவேண்டியநிலையேற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.