வடக்கு, தெற்கிற்கு தனித்தனியாக சட்டமியற்ற கோட்டா இடமளிக்க மாட்டார்- இந்திக

221 0

தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாரித்துள்ள யோசனைகள் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தமது நிலைபாட்டை வௌியிட வேண்டும் என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

இன்று (17) முற்பகல் பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தமிழ் தேசிய கூட்டமைப்பால் தயாரிக்கப்பட்ட யோசனைகள் கட்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், மஹிந்த ராஜபக்ஷவிற்கு சமர்ப்பித்த யோசனைகள் தொடர்பில் நியாயமான பதில் ஒன்று கிடைக்கவில்லை என்றும் ஆர்.சம்பந்தன் கூறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இனவாத மற்றும் தீவிரவாத கோரிக்கைகளுக்கு பொதுஜன பெரமுன ஒருபோதும் உடன்படாது என அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் நிலைப்பாட்டினை அறிந்துக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.

அதேபோல், எந்தவொரு கட்சியுடனும் கலந்துரையாடல்களுக்கு தயார் என்றும், எனினும் வடக்கிற்கு ஒரு சட்டம் தெற்கிற்கு ஒரு சட்டமாக தனித்தனியாக சட்டமியற்ற மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ தயாரில்லை எனவும் தெரிவித்தார்.