கொள்ளையிடும் நோக்கத்துடனேயே கொலை செய்தேன்

236 0

கொள்ளையிடும் நோக்கத்துடனேயே கொலை செய்தேன் என கள்ளிக்குளத்தில் கொலை செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சாரதி கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

 

கடந்த 9 ஆம் திகதி ஒரு பிள்ளையின் தந்தையான சின்னப்புதுக்குளத்தினை சேர்ந்த 27 வயதுடைய கேதீஸ்வரன் சுவேந்திரபிரகாஸ், கள்ளிக்களம் பகுதியில் பற்றையொன்றினுள் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இரவு முருகனூரைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 24 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

சந்தேகநபர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  “பணத்தேவைக்காக கொள்ளையிலும் நோக்கத்துடனேயே கொலை செய்தேன்.

முச்சக்கரவண்டி சாரதியின் கழுத்தில் காணப்பட்ட சங்கிலியை எடுப்பதே நோக்கமாக இருந்தது.

 

நீண்டகாலமாக கொள்ளையிடும் நோக்கத்துடனேயே கத்தி போன்ற பொருட்களை வாங்கி வைத்திருந்தேன்.

குறித்த தினத்தில் கத்தியை எடுத்துவந்தபோது கோவில்குளம் சந்தியில் உள்ள தரிப்பிடத்தில் இந்த முச்சக்கரவண்டி சாரதி நின்றார்.

குறித்த நபரை சந்தித்து தொலைப்பேசி இலக்கத்தினை பெற்றுக்கொண்டு சென்றிருந்தேன். மாலை நேரமானதும் முச்சக்கரவண்டி தேவை போகவேண்டும் எனத் தெரிவித்ததையடுத்து அவர் வந்தார்.

இதற்கு முதலும் மாலை 7 மணியளவில் நெடுங்கேணிக்கு குறித்த முச்சக்கரவண்டியை வாடகைக்கு அமர்த்திச் சென்றிருந்தேன். எனினும் கொலை செய்வதற்குரிய இடம் அமையவில்லை. அத்தோடு அவருக்கு வாடகை பணமும் வழங்கவில்லை.

எனவே கடந்த 9ஆம் திகதி பணம் தருகின்றேன் என அவரை வரவழைத்து, நான் தற்போது கொழும்பு செல்ல வேண்டும் ஈரப்பெரியகுளத்தில் விடுமாறு தெரிவித்தேன்.

போகும் வழியில் பெண்ணொருவர் கள்ளிக்குளத்திற்கு வந்துள்ளார் கள்ளிக்குளம் போவோமா எனக் கேட்டேன். அவரும் சரி என முச்சக்கரவண்டியை கள்ளிக்குளத்திற்கு செலுத்தினார்.

அங்குச் சென்றதும் முச்சக்கரவண்டியை சற்று உள்ளே தள்ளி நிறுத்தச் சென்றேன். அவர் முச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டு என்னைத் திரும்பிப் பார்க்கும்போது கத்தியால் கழுத்தில் வெட்டினேன். கத்தி உடைந்துவிட்டது. அவர் ஓடினார். நான் துரத்திச் சென்றவுடன், அவர் சங்கிலி மற்றும் தன்னிடம் இருந்த பொருட்களைக் கழற்றி எறிந்தார். பின்னர் எழுந்து விட்டார். அதன் பின்னர் கழுத்தை நெரித்துக் கொன்றேன்.

அதன்பின்னர் முச்சக்கரவண்டியில் இருந்த போத்தலை எடுத்து பெட்ரோலையும் துணியை அவரின் மேல் போட்டு எரித்தேன்.

அதன்பின்னர் அங்கிருந்து தப்பித்து கொழும்பு, மாத்தறை, ஹட்டன் போன்ற இடங்களுக்கு சென்றேன் என வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.