இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இரணைதீவு மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுத்தரும் நடமாடும் சேவை மற்றும் நேரடி கண்காணிப்பு நடவடிக்கை ஒன்று  நேற்று முன் தினம் (11.10.2019)  இடம்பெற்றது.

 

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனம்  2017 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி இரணைதீவு பகுதியில் மக்கள் குடியேறிய காலப்பகுதியிலிருந்து அவர்களின் அடிப்படை தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்துவந்ததன் அடிப்படையில் மக்களின் பிரச்சினை தொடர்பிலும் மீள்குடியேற்றத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பிலும்  இரணைதீவு மக்களுடன் இணைந்து  2019 ஆம் ஆண்டு இரண்டாம் மாதம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தனர்.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் கடந்த 01.03.2019 அன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நேரடி கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த நிலையில் குறித்த பகுதி மக்களின் அடிப்படை பிரச்சினைகளான காணிவிடுவிப்பு போக்குவரத்து, சுகாதார பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்திருந்தனர்.

அதனடிப்படையில் இரணைதீவு மக்களால் முன்வைக்கப்பட்ட அடிப்படை பிரச்சினைகளை நேரடியாக தீர்த்துவைக்கும் முகமாக நேற்று (11.10.2019) குறித்த நடமாடும் சேவையானது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த நடமாடும் சேவைக்காக 16 அரச நிறுவனங்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், அவற்றின் ஊடாக இப்பகுதியில் வசிக்கும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை ஆராயப்பட்டு அவர்களிற்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் வகையில் குறித்த நடமாடும் சேவை இடம்பெற்றுள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலக இணைப்பாளர் கனகராஜ் தெரிவித்தார்.

 

குறித்த நடமாடும் சேவையில் பூநகரி பிரதேச செயலாளர் கிருஸ்ணேந்திரன் புதுக்குடியிருப்பு பிரதேச சபை செயலாளர்,திணைக்களங்கள் சார் அதிகாரிகள், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரிவுகள் சார் அதிகாரிகள், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

இதேவேளை குறித்த பகுதியில் இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதாகவும் பொலிசாரிடம் பிரதேச மக்கள் நடமாடும் சேவையில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்தனர்.

குறிப்பாக அப்பகுதியில் உள்ள மணல், கற்றாளை,இ மாடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் வேறு நபர்களால் சூரையாடப்படுவதாகவும் குறித்த நடவடிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பொலிசாரிடம் மக்கள் தெரிவித்துள்ளனர்.

 

இதேவேளை குறித்த நடமாடும் சேவை ஆரம்பிக்கப்பட்டபோது அப்பகுதியில் கடற்படை உத்தியோகஸ்தர் ஒருவரினால் மக்களின் செயற்பாடுகள் மற்றும் அனைத்து செயற்பாடுகளும் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. குறித்த ஒலிப்பதிவு செய்யப்படும் சம்பவம் தொடர்பில் யாழ் பிராந்திய இணைப்பாளர் கனகராஜா குறித்த உத்தியோகஸ்தரை அழைத்து விசாரணை மேற்கொண்டிருந்தார். அதன் பின்னர் குறித்த பகுதியைவிட்டு குறித்த அதிகாரிகரி உடனடியாக வெளியேறியமை குறிப்பிடதக்கது.