முன்னாள் சுங்கப் பணிப்பாளர் நாயகம் ஜகத் பீ விஜேவீர மற்றும் முன்னாள் சுங்க மேலதிக பணிப்பாளர் தாரக செனவிரத்ன ஆகியோரை கைதுசெய்யுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனை மற்றும் கோரிக்கைக்கு அமைய, அனுராதபுரம் ‘ சந்த ஹிரு சேய’ நினைவுத் தூபியில் வைப்பதற்காக தங்கத்தினாலான சமாதி நிலை புத்தர் சிலையை அமைக்க, யாழ். மாதகல் கடலில் கைப்பற்றப்பட்ட ஒரு தொகை தங்கத்தில் 8 கிலோவை கடற்படைக்கு வழங்கியதக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் சுங்கப் பணிப்பாளர் நாயகம் மற்றும் மேலதிக பணிப்பாளர் ஆகியேரை கைது செய்ய சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந் நிலையில் இவர்களை உடனடியாக கைதுசெய்து மன்றில் ஆஜர் செய்யுமாறு கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க எப்.சி.ஐ.டி. எனும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தர்விட்டுள்ளார்.
இது தொடர்பில் நிதிக் குற்றப் புலனயவுப் பிரிவின் விசாரணை அறை இலக்கம் 8 பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சஞ்ஜீவ பெர்ணான்டோ தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுக்கும் நிலையில், விசாரணையின் தற்போதைய நிலை கோட்டை நீதிவான் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டு, சட்ட மா அதிபரின் அலோசனை தொடர்பிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையிலேயே இந்த கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.