8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

200 0

கல்முனை பகுதியில் பாடசாலை சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேகநபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (புதன்கிழமை) கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இதன்போது வழக்கு தொடர்பாக நீதிவான் கூறுகையில்  “யாழ்ப்பாணம், திருகோணமலை, மல்லிகைத் தீவு உள்ளிட்ட பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதுடன், அதற்கெதிராக பல அமைப்பினர் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

ஆனால் இச்சம்பவம் தொடர்பாக இங்கு எந்த அமைப்பினரோ அதற்கான கேள்விகளையோ யாரும் முன்வைக்காதது வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.

வேறு இடத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருந்தால் நியாயமான போராட்டங்கள் நடந்திருக்கக் கூடும்” என சந்தேகநபர் சார்பாக முன்னிலையான சட்டத் தரணிகளிடம் தெளிவுபடுத்தினார்.

கடந்த மாதம் 31ஆம் திகதி அம்பாறை, கல்முனைக் குடியில் குறித்த பாலியல் துஷ்பிரயோக சம்பவம் இடம்பெற்றது.

இதன்போது, 8 வயதான சிறுமி பாடசாலை சென்று வீடு திரும்பிய போது, கல்முனைகுடி கனீபா வீதியை சேர்ந்தவர் சிறுமியை அழைத்துச் சென்று கடையில் சவர்க்காரம் ஒன்று வாங்கித்தருமாறு கோரியுள்ளார். இதனையடுத்து சிறுமியும் சவர்க்காரத்தை வாங்கி சந்தேகநபரது வீட்டிற்கு சென்று கொடுத்துள்ளார்.

இதன்போது அவர் மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும், அயலவர்கள் கண்டதையடுத்து சந்தேகநபர் அங்கிருந்து  தப்பிச் சென்றதாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரண்டு நாட்களின் பின்னர் சந்தேகநபரை அயலவர்களின் ஒத்துழைப்புடன் கைது செய்த பொலிஸார் அவரிடம் விசாரணையை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.