ஏகமனதாக கோரினால் மாத்திரமே தேர்தலில் போட்டியிடுவேன் – கரு ஜயசூரிய

246 0

நாட்டில் தற்போது இடம்பெறும் அதிகாரப் போராட்டத்தில் அங்கம் வகிக்க விரும்பாத போதிலும், எதிர்கால தலைமுறையினருக்காக அர்ப்பணிப்புடன் செயற்படத் தயாராக இருப்பதாக சபாநாயகர் கருஜய சூரிய தெரிவித்துள்ளார். 

 

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு இதற்கு முன்னரும் மதத் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. எனினும் இந்த அதிகாரப் போராட்டத்தில் தான் அங்கம் வகிக்க விரும்பவில்லை.

எனினும் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்களால் அவ்வாறான கோரிக்கை முன்வைக்கப்பட்டால் அவை தொடர்பில் ஆராயலாம்.

எனினும் அனைவரும் ஒன்றிணைந்து ஏகமனதாக கோரினால் மாத்திரமே இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்த முடியும். எவ்வாறிருப்பினும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஏனைய கட்சிகளினதும் அமைப்புக்களினதும் ஆதரவும் அத்தியாவசியமானதாகும் என்றும் கூறினார்.

சிவில் சமூக ஆர்வலர்களுடன் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.