இனப்பிரச்சனையை இதயசுத்தியோடு தீர்க்காவிட்டால் நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்

357 0

naseer-400x255-720x480நாட்டில் நீண்டகாலமாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனையை இதயசுத்தியோடு தீர்க்காவிட்டால் நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – பதுளை வீதி, கரடியனாறில் நிர்மாணிக்கப்படவுள்ள விவசாய சேவைக்கால பயிற்சி நிலையத்துக்கு அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்றையதினம் (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கிழக்கு மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

‘நல்லாட்சி நிலவும் இந்தக் காலகட்டத்திலேயே இனப்பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கவில்லையானால், இன்னும் அரைநூற்றாண்டு சென்றாலும், அதிகாரப்பகிர்வு கிடைக்காத துரதிஷ்டம் நிலவும். அத்துடன், சிறுபான்மைச் சமூகங்களை இலவுகாத்த கிளிபோல் காக்கவைத்தால் இந்த நாடு பாரிய சவாலை எதிர்கொள்ளும்.

கிழக்கு மாகாணத்தில் வேறொரு புரட்சி நடைபெறலாம், அது ஆயுதப் புரட்சியல்ல, வறுமைப் புரட்சியாகவும் கூட இருக்கலாம். தொழில் இல்லாத இளைஞர், யுவதிகள் தமது வறுமைக்காக போராட்டத்தை ஆரம்பிக்கலாம்.

ஆகவே கசப்பான வரலாறுகளை மேலும் தொடர விடாமல் அதிகாரப் பகிர்வின் மூலம் அபிவிருத்திகளை மேற்கொண்டு, நாட்டில் சமத்துவத்தைப் பேண அரசு முயற்சிக்க வேண்டும்.

கடந்த மூன்று தசாப்த காலமாக இனப்பிரச்சனைக்கான தீர்வுகள் இழுத்தடிக்கப்பட்ட வரலாறுகள், எமக்கு கசப்பான உண்மையை நினைவுகூர்ந்துகொண்டிருக்கின்றது. அது இனியும் நடைபெறக்கூடாது.

அதற்காக, இந்த நாட்டிலுள்ள அனைத்து அரசியல் தலைமைகளும் ஒன்றுபட்டு அரசியல் தீர்வை உடனடியாக அமுல்படுத்தவேண்டிய தேவையிருக்கின்றது. இனவாத நஞ்சுகளை அகற்றுவதற்காக தமிழ் தலைமைகள் பல தியாகங்களைச் செய்யவேண்டியிருக்கின்றது எனவும் தெரிவித்தார்.