தலைவர்களின் பின்னால் செல்லும் யுகம் நிறைவடைந்துள்ளது- துமிந்த

210 0

தலைவர்களின் பின்னால் செல்லும் யுகம் நிறைவடைந்துள்ளதாகவும், வேலைத்திட்டங்களினதும், கொள்கைகளினதும் அடிப்படையிலேயே வேட்பாளர்களுக்கான ஆதரவைத் தீர்மானிக்க வேண்டியுள்ளதாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (19) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்கள் சிலர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். சிலர் பகிரங்கமாக கட்சியால் அறிவிக்கப்படாமல் தங்களை ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறிக் கொண்டு நாடு முழுவதும் செல்கின்றனர்.

இந்த வேட்பாளர்களில் யார் சிறந்த வேலைத்திட்டத்தை நாட்டுக்கு முன்வைக்கின்றார்கள் என்பதுவே முக்கியமானது. தலைவர்கள் யார் என்பது நாட்டில் தற்பொழுதுள்ள சூழலுக்கு பிரச்சினையல்ல எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கு தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதான் பொருத்தமானவர் எனவும், எந்தக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தாலும் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதிதான் என்பதே எமது வாதம் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராக இருந்த காலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல்வேறு இடங்களிலும் உறுதியாக கருத்துத் தெரிவித்தவரே இவர் என்பது குறிப்பிடத்தக்கது.