ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்த வேண்டுமென்றால் ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு வேட்பாளரை முன்நிறுத்த வேண்டுமென அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தயாசிறி மேலும் கூறியுள்ளதாவது, “நாம் இன்னும் வேட்பாளர் குறித்து தீர்மானிக்கவில்லை.
நாங்கள் எந்நேரமும் கட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தே செயற்பாடுகளை முன்னெடுத்து செல்கின்றோம். ஆனாலும் தற்போதைய சூழ்நிலையில் கட்சியை வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
அதற்கு முதலில் ஒழுக்காற்று நடவடிக்கைகளையே மேற்கொள்ள வேண்டியதே மிகவும் அவசியமாகும்.
அத்துடன் கட்சி குறித்தும் ஜனாதிபதி தேர்தல் குறித்தும் ஆராய்வதற்கு ஒன்று கூடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால அழைப்பு விடுத்துள்ளார். அவ்வாறாயின் இவ்விடயம் குறித்து நாளைய தினமே கலந்துரையாடலில் ஈடுபடுவதற்கு நாம் தயாராகதான் உள்ளோம்.
மேலும் ஐனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்கு அவசரப்பட வேண்டிய அவசியமில்லை. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரைக்கு அதற்கு காலம் இருக்கின்றது.
மஹிந்தவுக்கு ஆதரவு இன்னும் வழங்குகின்றீர்களா என்று கேட்டு புதிய பிரச்சிரனைகளை தோற்றுவிக்க வேண்டாம். ஆனாலும் மஹிந்தவை ஜனாதிபதியாக்குவதற்கு இதற்கு முன்னர் மிகவும் சிரமப்பட்டுள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.