பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர் மட்டம் பதவியொன்றை உருவாக்குவதற்கு சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அண்மையில், பாதுகாப்பு மற்றும் இராணுவத் தரப்பு மீது எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஏற்பட்டுள்ள கரிசனைகளை அடுத்தே, இந்தப் புதிய பதவியை உருவாக்குவது குறித்து ஆராய்ந்து வருகிறார்.
முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்கள் மற்றும் கொலைகள் தொடர்பாக சிறீலங்காப் படையினர் பலர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற விவகாரங்களைக் கையாள்வதற்கு நம்பிக்கையான ஒருவரை பாதுகாப்பு விவகாரங்களுக்கு நியமிக்க அவர் திட்டமிடுள்ளார்.
இதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டவரான பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா நியமிக்கப்படலாம் எனவும் கருதப்படுகின்றது.அத்துடன், சிறீலங்கா அரசியலமைப்புச் சட்டத்தின்படி சிறீலங்காவின் ஆட்சியாளராலேயே பாதுகாப்பு அமைச்சும் கையாளப்படவேண்டும்.
அந்தவகையில், போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் ஐநாவுக்கு சிறீலங்காவின் ஆட்சியாளரே பதிலளிக்கவும்வேண்டும்.இந்த நிலையில் பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் நெருக்கமானதும் காத்திரமானதுமான தொடர்புகளை வைத்திருக்கும் நோக்கிலேயே இந்தப் புதிய பதவி உருவாக்கப்படவுள்ளது.
மைத்திரிபால சிறிசேனவால் இந்த விவகாரத்தில் நேரடியாக ஈடுபடுவது நடைமுறைச்சாத்தியமற்றதாகும். அவருக்கு பல்வேறு பணிச்சுமைகள் இருப்பதால், பாதுகாப்புப் படைகளை நெருக்கமாக ஒருங்கிணைப்பதற்கு அவருக்கு வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.
அத்துடன், கடந்தகால அரசியல் அனுபவத்தில் அடிப்படையில் இந்தப் புதிய பதவி உருவாக்கப்படவுள்ளது.அத்துடன், தற்போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக இருக்கும் ருவான் விஜேவர்த்தன சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன எதிர்பார்த்தளவுக்கு போதிய செயற்றிறன் கொண்டவராக இல்லாதிருப்பதாலேயே புதிய பதவி உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.