ஏப்ரல் தாக்குதலுக்கு பின்னர் முஸ்லிம் சமூகம் தற்போது ஊடக பயங்கரவாதத்தையே எதிர்கொண்டு வருவதாக அசை்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
மூத்த பத்திரிகையாளர் கலாபூஷனம் மறைந்த க.ப. சிவத்தின் நினைவஞ்சலிக்கூட்டம் இன்று கண்டியில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
சம உரிமை சமத்துவத்தை இல்லாமலாக்குவதிலே இன்று அதிகார வர்க்கத்தின் காலம் சென்றுகொண்டிருக்கின்றது. இதனால்தான் தேவையில்லாத பிரச்சினைகள் சர்ச்சைகள் கலவரங்களில் நாங்கள் மாட்டிக்கொள்கின்றோம். அத்துடன் அனைத்து ஆயுதப்போராட்டங்களுக்கும் அடிப்படைக்காரணமாக இருந்திருப்பதும் அந்த இடங்களில் அதிகாரவர்க்கம் மற்றவர்களின் சமத்துவம் சம உரிமையை இல்லாமலாக்க முற்படுவதிலாகும்.
அத்துடன் ஊடக தர்மத்தை எடுத்துப்பார்த்தால், அது தற்போது சற்றேனும் பின்பற்றப்படுவதாக இல்லை. சாதாரண விடயங்களையும் ஊதிப்பெருக்கும் விடயத்தை ஊடகங்களே மேற்கொண்டுவருகின்றன.
அச்சு ஊடகங்கள் எப்படி இருந்தபோதும் இலத்திரணியல் ஊடகங்கள் சமூகத்துக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்தும் விடயங்களையே ஒளிபரப்பிவருகின்றன. அனைத்து விடயங்களையும் அரசியலாக்கும் நிலையே தற்போது இருந்து வருவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

