மண்சரிவு பாதிப்பை நோக்கியுள்ள ஹொரணை கல்வி வலயத்தின் புளத்சிங்கள, ஹல்வத்துறை தமிழ் வித்தியாலயத்தை வேறு இடத்தில் மாற்றியமைக்க எடுக்கப்பட்ட முடிவுக்கமைய ஹல்வத்துறை தோட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 8 ஏக்கர் காணியில் தற்காலிகக் கட்டடங்கள் அமைப்பதென மேல் மாகாணக் கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ் பிரிவுக்கு பொறுப்பான கல்வி அதிகாரி எம். சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.
சீரற்ற கால நிலை நிலவும் போது மாணவர்களின் பாதுகாப்பு கருதி அடிக்கடி பாடசாலை மூடப்படுவதைக் கவனத்திற் கொண்டு புதிய பாடசாலை அமைப்பதற்கென ஒதுக்கப்பட்டுள்ள காணியில் தற்காலிக நடவடிக்கையாக மலசல கூட வசதி மற்றும் குடிநீர் வசதிகளுடன் கூடிய தற்காலிக கட்டிடங்கள் அமைப்பதற்கும் இவ்வாறு அமைக்கப்படும் கட்டிடங்கள் பாடசாலைக்கென நிரந்தர கட்டிடங்கள் அமைக்கப்பட்ட பின்னரும் பாடசாலை நலன்களுக்கு பயன்படுத்தக் கூடிய வகையில் அமைப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சுமார் 500 மாணவர்களுடன் உயர்தரம் வரையில் இயங்கிவரும் இப்பாடசாலை வளாகத்தில் மண்சரிவு அபாயம் ஏற்பட இடமுண்டு என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி உறுதிப்படுத்தப்பட்டு பாடசாலை பாதுகாப்பான இடத்தில் மாற்றியமைக்கப்பட வேண்டும் என புளத்சிங்கள பிரதேச செயலகத்துக்கு ஏற்கனவே ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

