பதவி பகிர்வினை மையப்படுத்தி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன் பரந்துப்பட்ட கூட்டணியமைத்தலுக்கான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவில்லை என்பதை சுதந்திர கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீறிஸ் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பரந்துப்பட்ட கூட்டணியமைத்தல் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை இவ்வாரத்தில் முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் நிறைவுப் பெற்றுள்ள பேச்சுவார்த்தைகளில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பதவிகள் தொடர்பில் ஆலோசிக்கப்படவில்லை. அதற்கான தேவையும் பொதுஜன பெரமுனவிற்கு கிடையாது.
உத்தேச ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினரே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படுவார் என்பது. கட்சி நிர்மாணிக்க்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட தீர்மானமாகும். இத்தீர்மானத்திற்கு அனைத்து பங்காளி கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.
ஆகவே இத்தீர்மானத்தில் எந்நிலையிலும் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. அத்துடன் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து அமைக்கவுள்ள அரசாங்கத்தில் எந்த கட்சியின் தலைமைத்துவம் பிரதமர் என்ற தர்க்கமும் இப்பேச்சுவார்த்தைகளில் பேசப்படவில்லை என்பதை சுதந்திர கட்சியினர் தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

