பொதுத்தேர்தலை நடத்த பொதுசன அபிப்ராயத்தை கோர அரசாங்கம் முயற்சிப்பது பயனறது.எவ்வாறு இருப்பினும் பெரும்பாலான மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான அதிருப்தியினையே வெளிப்படுத்துவார்கள்.
இதன்போது அரசாங்கம் மக்களின் கருத்திற்கு மதிப்பளித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் போராசியர் ஜி. எல். பீறிஸ் கேள்வியெழுப்பினார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தல் இடம் பெறுவதற்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்துவதாக அரசாங்கம் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் கருத்துக்களை குறிப்பிட்டுள்ளது.
பொதுத்தேர்தலை நடத்துவதற்கு சர்வஜன வாக்கெடுப்பினை கோருவதற்கு எவ்வித அவசியமும் கிடையாது.
அரசாங்கம் குறிப்பிடுவதை போன்று பொதுசன அபிப்ராயத்தை கோரினால் பெரும்பாலான மக்கள் அரசாங்கத்திற்கு எதிராகவே தமது தீர்மானங்களை முன்வைப்பார்கள்.
இத் தீர்மானங்களை கொண்டு எவ்வித சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாது. 19வது அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றம் கூடிய தினத்தில் இருந்து நான்கரை வருடம் பதவி வகிக்க வேண்டும்.
இடைக்காலத்தில் பாராளுமன்றத்தை கலைக்க வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெற வேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பாண்மை ஆதரவு தற்போதைய நிலையில் கிடைக்கப் பெறும் என்பது சாத்தியமற்றது.
இந்த ஒரு வழியின் ஊடாகவே பாராளுமன்றத்தை கலைக்க முடியும் என அவர் தெரிவித்தார்.