ஜனாதிபதியையும், பிரதமரையும் அழைக்கும் திட்டம் எதுவுமில்லை-ஆனந்த குமாரசிறி

251 0

தெரிவுக்குழுவின் விசாரணைகளுக்கு தற்போதுவரை ஜனாதிபதியையும், பிரதமரையும் அழைக்கும் திட்டம் எதுவுமில்லை. ஆனால் அவர்களை அழைக்குமாறு தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் கோரினால், அதுகுறித்து ஆராய்ந்து தீர்மானிப்பேன் என்று பிரதி சபாநாயகரும், பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், இந்த விசாரணைகளுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் அழைக்கப்படுவார்களா என்று வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தெரிவுக்குழுவின் விசாரணைகளுக்கான பாதுகாப்புச் செயலாளர் சாந்த கோட்டேகொட, முன்னாள் புலனாய்வுப் பிரிவு அதிகாரி சிசிர மென்டிஸ், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி ஆஜராகி சாட்சியம் வழங்கியிருந்தனர்.

இதுவரை இடம்பெற்ற விசாரணைகளில் பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய அடுத்தகட்ட விசாரணைகளுக்காக ஜனாதிபதியும், பிரதமரும் அழைக்கப்படுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுபற்றி பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவர் ஆனந்த குமாரசிறி மேலும் கூறுகையில்,

ஜனாதிபதியையும், பிரதமரையும் தெரிவுக்குழுவின் விசாரணைகளுக்கு அழைக்கும் ஆயத்தம் எவையும் தற்போதுவரை இடம்பெறவில்லை. ஆனால் விசாரணைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வதற்கு அவர்கள் இருவரும் அழைக்கப்பட வேண்டும் என்று தெரிவுக்குழு உறுப்பினர்கள் கோரும்பட்சத்தில், நான் அதுகுறித்து ஆராய்ந்து தீர்மானமொன்றை மேற்கொள்வேன்.எனத் தெரிவித்துள்ளார்.