மலையக அரசியல்வாதிகள் தமது சுயநலத்திற்காக மக்களைப் பிரித்தாளுகின்றனர். இத்தகையோரின் பிற்போக்கான செயற்பாடுகள் மற்றும் இணக்கப்பாடற்ற தன்மை என்பன மலையக மக்களின் உரிமைகள் பறிபோவதற்கு உந்து சக்தியாக அமைந்துள்ளன.
முஸ்லிம் அரசியல்வாதிகளிடையே ஏற்பட்ட ஒற்றுமை வடக்கு மற்றும் மலையக அரசியல்வாதிகளிடையே ஏற்படவில்லை என்பதே வெளிப்படையான உண்மை என்று ஜே.வி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மத்திய குழு உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் பேரினவாதம் தற்போது தலைவிரித்தாடுகின்றது. பேரினவாதிகளின் மேலெழும்புகை நிலையானது சிறுபான்மை மக்களிடையே ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கின்றது. தமது எதிர்காலம் எவ்வாறு அமையுமோ? என்கிற கேள்விக்கு மத்தியில் சிறுபான்மைச் சமூகத்தினரின் வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவங்களைத் தொடர்ந்து நாட்டில் பதற்ற சூழ்நிலை இருந்து வருகின்றது. முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கீடுகள் அம்மக்களை நிலைகுலையச் செய்திருக்கின்றன. உயிர்த்த ஞாயிறு சம்பவத்தைத் தொடர்ந்து இந்நாட்டில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் இந்நாட்டில் சிறுபான்மையினர் வாழ்வதற்குப் பொருத்தமான ஒரு நாடுதானா? என்று சிந்திக்க வைத்திருக்கின்றது.
உயிர்த்த ஞாயிறு சம்பவத்தைத் தொடர்ந்து இனவாதிகள் முஸ்லிம் அரசியல்வாதிகள் மீதும் நெருக்கடியை ஏற்படுத்தத் தவறவில்லை. அமைச்சர் ரிசாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோர் பதவி விலகவேண்டும் என்று அழுத்தம் கொடுத்தனர். இதில் அவர்கள் வெற்றியும் கண்டனர். இதன்போது ஒட்டுமொத்த முஸ்லிம் அரசியல்வாதிகளும் கட்சி பேதங்களை மறந்து சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தினர். மலையக அரசியல்வாதிகளுக்கு இது ஒரு நல்ல பாடமாகும். அமைச்சுப் பதவிக்காகவும், ஏனைய சுகபோகங்களுக்காகவும் சமூகத்தைக் காட்டிக்கொடுக்கும், சமூகத்தினரிடையே பிளவினை ஏற்படுத்தும் சில மலையக அரசியல்வாதிகள் முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஒற்றுமையை படிப்பினையாகக் கொள்ள வேண்டும்.
மலையக மக்களின் தேவைகள் அதிகமுள்ளன. தீர்க்கப்படாத பிரச்சினைகள் அதிகமுள்ளன. இவற்றுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க ஐக்கியமே அவசியமாகும். தோட்டத் தொழிலாளர் சம்பள விடயத்தில் மலையகக் கட்சிகள் எதிரும் புதிருமாகவே செயற்பட்டன. ஒன்றிணைந்தபோக்கு காணப்படவில்லை. உதட்டளவில் ஒற்றுமை குறித்து மலையகக் கட்சிகள் பேசினவே தவிர உள அளவில் வேறுபாடுகளே அதிகமாகக் காணப்பட்டன. ஒரு கட்சி இன்னொரு கட்சியின் மீது சேறு பூசும் நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தது. தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தைப் பெற்றுக்கொடுப்பதில் கட்சிகளின் முன்னெடுப்புகள் போதுமானதாக இல்லை. மலையகக் கட்சிகள் சுய இலாபத்தினை மறந்து ஒன்றுபட்டு குரல் கொடுத்திருந்தால் நியாயமான சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்திருக்கும் என்பதனை மறுப்பதற்கில்லை.
முஸ்லிம் அரசியல்வாதிகளிடையே ஏற்பட்ட ஒற்றுமை வடக்கு மற்றும் மலையக அரசியல்வாதிக ளிடையே ஏற்படவில்லை என்பது வெளிப்படையான உண்மை. இனியும் ஏற்படுமா? என்பதும் சந்தே கமே. வடக்கு மக்களின் பிரச்சினைகள் அதிக முள்ள நிலையில் இப்பகுதி அரசியல்வாதிகள் கைகோர்த்து முன்செல்ல வேண்டும். இதேவேளை மலையகத்தில் ஆற்றல்மிக்க மக்களின் நலன்பேணும் தலைமைத் துவங்கள் கட்டியெழுப்பப்பட வேண்டும். இதன் மூலம் மலையக மக்களின் வாழ்வில் அபிவிருத்தி ஏற் படும் என்றார்