எவ்வாறான கூட்டணிகள் அமைந்தாலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இரண்டு விடயங்களில் விட்டுக்கொடுப்பை செய்யமாட்டோம்.
பொதுஜன பெரமுன கட்சியின் சின்னம் மற்றும் எமது ஜனாதிபதி வேட்பாளர் ஆகிய இரண்டு விடயங்களில் ஒருபோதும் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என்று கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய தெரிவித்தார்.
எந்தவொரு தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி அமைப்பதற்கு பொதுஜன பெரமுன தயாராகவே இருக்கின்றது. ஆனால் எமது நிபந்தனைகளில் கீழிறங்கி வரமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எந்தவொரு முன்னணியையும் அமைப்பதற்கு பொதுஜன பெரமுன தயாராகவே இருக்கின்றது. எம்முடன் யாரும் இணைந்துகொள்ளலாம். அதற்கான கதவுகள் திறந்தே காணப்படுகின்றன.
தற்போது சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் பரந்துபட்ட கூட்டணியை அமைப்பதற்காக பேச்சு நடத்துகின்றன. இதுவரை பல சுற்றுப் பேச்சுக்கள் நடைபெற்றுள்ளன.
ஆனால் இன்னும் முக்கியமான விடயம் குறித்து பேசப்படவில்லை. பொதுவான விடயங்கள் குறித்து மட்டுமே இதுவரை பேசப்பட்டுள்ளன. இதன் பின்னரே முக்கிய விடயங்கள் குறித்து பேசப்படவுள்ளன.
ஆனால் ஒரு விடயத்தில் நாங்கள் மிகவும் கவனமாக இருக்கின்றோம். அதாவது எவ்வாறான கூட்டணிகள் அமைந்தாலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இரண்டு விடயங்களில் விட்டுக்கொடுப்பை செய்யமாட்டோம்.
பொதுஜன பெரமுன கட்சியின் சின்னம் மற்றும் எமது ஜனாதிபதி வேட்பாளர் ஆகிய இரண்டு விடயங்களில் ஒருபோதும் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை.
இதனை ஏற்றுக்கொண்டு அனைவரும் எம்முடன் கூட்டுச் சேர்வதற்காக பேச்சுவார்த்தை நடத்தலாம். சுதந்திரக் கட்சியுடன் நாம் இணைந்து செயற்படுவதற்கான சாத்தியம் அதிகம் இருக்கின்றது.
காரணம் இரண்டு தரப்பினரும் பல முக்கிய விடயங்களில் ஒன்றுபட்ட கருத்தைக் கொண்டுள்ளனர். ஆனாலும் சுதந்திரக் கட்சி மட்டுமல்ல எந்தக் கட்சியாக இருந்தாலும் எமது நிபந்தனைகளை நாங்கள் விட்டுக்கொடுக்கமாட்டோம். அதனை புரிந்துகொண்டு எம்முடன் யாரும் பேச்சு நடத்தலாம். யாருடனும் கூட்டணி அமைக்க தயாராகவே இருக்கின்றோம். எமது கட்சியின் கதவுகள் அதற்காக எப்போதும் திறந்திருக்கும்.
சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் பரந்துபட்ட கூட்டணியை அமைப்பதற்காக இன்றைய தினம் ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தவுள்ள நிலையில் அது சாத்தியமா என வினவியபோதே ரம்புக்வெல்ல இதனை கூறினார்.