கிரிகெட்டால் மோதல்!

360 0

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா, தரவளை விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் போது இரு குழுக்களுக்கு இடையில் கடந்த 9 ஆம் திகதி மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

இந்த மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர்கள் 6 பேரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஏனைய 5 சிறுவர்களை, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை வைக்குமாறும் ஹட்டன் நீதிமன்ற நீதவான் ஜயராமன் டொர்க்சி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு கடந்த புதன்கிழமை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் போது இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வாய் தர்க்கம் மோதலாக மாறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இது தொடர்பான காணொளி அட்டன், சாஞ்சிமலை பிரதான வீதியின் தரவளை பகுதியில் வீடு ஒன்றில் பொருத்தபட்டிருந்த சி.சி.ரி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.

இந்த மோதல் சம்பவத்தில் காயமடைந்த 3 பேரில் ஒருவர் கண்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருவதோடு, மேலும் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் 2 பேர் சிகிச்சை பெற்று வருவதாக ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.