உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தற்போது விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளாதவர்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு, சட்டமா அதிபர் அறிவுறுத்தல் விடுத்திருந்தார்.
குண்டுத்தாக்குதல்கள் தொடர்பாக ஆராய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் இரண்டு இடைக்கால அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே சட்டமா அதிபர் இந்த அறிவுறுத்தல்களை விடுத்திருந்தார்.
இதற்கமைய, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவுக்கு மேலதிகமாக தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி, விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி மற்றும் மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

