முஸ்லிம்களை போன்று பெரும்பான்மை சமூகத்தினரும் நடந்துகொள்ள வேண்டும் – மஸ்தான்

262 0

முஸ்லிம் மக்கள் எவ்வாறு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை காட்டிக்கொடுத்தார்களோ அதேபோல பெரும்பான்மை சமூகத்தில் இருக்கின்ற மக்கள் இனவாத தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டவர்களை இனங்காட்ட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான்  தெரிவித்துள்ளார்.

குளியாப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் சந்தித்து கலந்துரையாடினார்.

குளியாபிட்டி – ஹெட்டிபொல அல் மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலுக்குச் சென்று மக்களுடன் கலந்துரையாடினார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும்  பெரும்பான்மை சமூகத்தில் இருக்கின்ற பயங்கரவாதப் போக்குடையவர்களை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்தார்.

அத்தோடு முஸ்லிம் மக்கள் எவ்வாறு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை காட்டிக்கொடுத்தார்களோ அதேபோல பெரும்பான்மை சமூகத்தில் இருக்கின்ற மக்கள் இனவாத தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டவர்களைக் காட்டிக்கொடுத்து, அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க உதவி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த கைதுகள் மூலம் இனிமேல் இந்நாட்டில் அனைத்து சமூகமும்  பல்லின மக்களும் ஒற்றுமையாகவும் நிம்மதியாகவும் வாழ்கின்ற ஒரு சூழலை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.