பாடசாலைகளை காலை 8 மணிக்கு தொடங்க அனுமதி

234 0

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளால் பாடசாலைகளை காலை 7.30மணிக்கு தொடங்குவதில் உள்ள சிக்கல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு வடக்கு – கிழக்கு மாகாணப் பாடசாலைகளை காலை 8 மணிக்கு தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதென.இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளால் பாடசாலைகளைத் தொடங்குதல் தொடர்பாக ஏராளமான அதிபர்கள், ஆசிரியர்களின் கருத்துக்கள் கண்டறியப்பட்டு இவ்விடயம் தொடர்பாக வடக்கு- கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இதில் பாதுகாப்புப் படையினரின் சோதனை நடவடிக்கைகளால் மாணவர்களின் போக்குவரத்து, அதிபர்கள், ஆசிரியர்களின் போக்குவரத்தில் ஏற்படும் தாமதம் என்பன சுட்டிக்காட்டப்பட்டது.

இதனால் பாடசாலைகளை காலை 8 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 2 மணிக்கு நிறைவு செய்வதற்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்

இவ்விடயம் தொடர்பாக அவர்கள் தெளிவாக அறிவுறுத்தியுள்ளனர்.

அதாவது பாடசாலைகளை காலை 8 மணிக்கு ஆரம்பிக்க, பாடசாலையின் அதிபர்கள் அந்தந்த வலயக் கல்விப் பணிப்பாளர்களிடம் அனுமதி பெற்றுக்கொள்ளமுடியும் எனக் கூறியுள்ளனர். தாம் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு இது பற்றி அறிவுறுத்துவதாகவும், இது ஒரு தற்காலிக ஏற்பாடகவே இருக்கும் எனவும் அவர்கள் கூறியுள்ளதோடு குறித்த அதிபர்களின் வேண்டுகோள்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படும் என உறுதியளித்தனர்.

ஆகையால் இடர்பாடுகள் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள் உடனடியாக வலயக் கல்விப் பணிப்பாளர்களின் அனுமதியைப்பெற்று பாடசாலைகளை காலை 8 ணிக்கு தொடக்குமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கேட்டுள்ளது.