சிறீலங்கா படையினர் தமிழர் கலைகளையும் இணைத்தே அழித்தனர்-குருகுலராஜா

300 0

%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%beஎமது பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள படையினர் எமது சொத்துகளை மட்டும் அபகரிக்கவில்லை எமது கலைகளையும் இணைத்தே அழித்தனர் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா தெரிவித்துள்ளார். இதற்கு கடற்படை அதிகாரி கப்டன் பொயோகொடாவால் அண்மையில் எழுதப்பட்ட புத்தகமும் ஓர் சாட்சி எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் சாவகச்சேரியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற யாழ் முத்து கலைவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

தமிழர்  பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள படையினர் எமது சொத்துகளை மட்டும் அபகரித்துச் செல்லவில்லை அதனுடன் சேர்த்து  எமது கலைகளையும்  அழித்தனர். இதனை நாம் கூறும்போது பலர் ஏற்காமல் இருந்திருக்கலாம் ஆனால் இவ்வாறே படையினர் அழித்தனர், என்பதற்கு கடற்படை அதிகாரி கப்டன் பொயோகொடாவால் அண்மையில் எழுதப்பட்ட புத்தகமும் ஓர் சாட்சி.

இந்த பொயோகொட என்னும் அதிகாரி புலிகளிடம் அகப்பட்டு நீண்டகாலம் முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வாழ்ந்தவர். அவர் அண்மையில் தனது அனுபவம் தொடர்பில் ஓர் புத்தகத்தினை எழுதியுள்ளார். அதாவது காரைநகர் கடற்படைத் தளம்மீது புலிகள் தாக்குதல் தொடுத்த சமயம் அதனை காக்கும் பொருட்டு திருமலையில் இருந்து பொயோகொட அழைக்கப்பட்டார். அங்கு சென்ற அவர் அந்த முகாமினையும் காரைநகர்ப் பிரதேசத்தினையும் முழுமையாக புலிகளிடம் இருந்து இராணுவ வசப் படுத்துகின்றார்.

இதன் காரணமாக காரைநகருக்குப் பொறுப்பாக இருந்த கடற்படைத் தளபதி பொயோகொடவையும் காரைநகருக்கே விடுவிப்புச் செய்து அங்கு பொயோகொட பணிபுரிந்தார். காரைநகரை மீட்ட படையினர். அங்கிருந்து வீடுகளுக்குச் செல்லும் இறங்குதுறைக்கு பொறுப்பாக பொயோகொட பணிபுரிந்தார். அப் பகுதியில் பணிபுரியும் படையினர் தமிழ் மக்களின் வீடுகளை சல்லடை இட்டுத் தேடும்போது பல பொருட்களையும் அபகரித்து வைத்து விடுமுறையில் வீடு செல்லும்போது எடுத்துச் சென்றனர்.

இதன் காரணமாக அங்கு ஓர் சோதனை நிலையம் அமைக்கப்பட்டு அவ்வாறு விடுமுறையில் செல்லும் படையினர் சோதனையின் பின்பே அனுமதிக்கப்பட்டதாகவும் எழுதியுள்ளார். அச் சோதனைகளின்போது தமிழ்மக்களின் பணம் , பொருள் மற்றும் நகைகள் மட்டும் கொண்டுசெல்லவில்லை. அப் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்களின் குடும்பப் படங்களைக் கூட படையினர் களவாடிச் செல்ல முற்பட்டபோது சோதனை நிலையத்தில் அவை கைப்பற்றப்பட்டதாக பொயோகொட எழுதியுள்ளார்.

இந் நிலையில் எமது இனத்தின் அடையாளங்கள் எவ்வளவுதூரம் அழிக்கப்பட்டன. என்பதற்கு இவைகளும் சான்று பகிர்கின்றன. எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறே எமது கலை, கலாச்சாரம் மட்டுமன்றி எமது இனத்தின் அடையாளங்களும் அழிக்கப்பட்டன. அண்மையில் நான் அனலை தீவில் ஓர் வீட்டிற்குச் சென்ற சமயம் அங்கு வீட்டின் முன்னால் ஓர் பெட்டகம் போடப்பட்டுள்ளது. அவர்களைப் பொறுத்தவரையில் அது ஓர் பெட்டகம். ஆனால் அதில் செதுக்கப்பட்டுள்ள வடிவத்தில் எமது பண்பாடு உள்ளது. குறித்த பெட்டகத்தை வாங்கி பண்பாட்டுத் திணைக்களத்தில் பராமரிக்கலாமா என்று எண்ணினேன்.

மாகாண சபையில்  ஓர் சந்தர்ப்பத்தில் எமது பாரம்பரிய பறையை முழக்க எண்ணினோம். ஆனால் அது அமங்கலமாகிவிடும் எனவும் பின்னர் பிறிதொரு நிகழ்விற்கு ஒத்தி வைத்தோம். ஆனால் தற்போது மங்கள இசை என்றால் சினிமா இசையே வருகின்றது. எமது பாரம்பரிய இசைகள் கலைகள் பண்பாடுகள் அனைத்தையும் வளர்க்க அனைவரும் முன்வர வேண்டும் எனவும் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தெரிவித்தார்.