உயிரிழந்த நிலையில் சிறுத்தை ஒன்று மீட்பு!

290 0

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்ட பகுதியில் இன்று காலை 8 மணியளவில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

 குறித்த தோட்டத்தில் 24ஆம் இலக்க தேயிலை மலையில் குறித்த சிறுத்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள, அதேவேளை மேலும் பல சிறுத்தைகளின் நடமாட்டம் இருப்பதாக தெரியவந்துள்ளது.

 மேற்படி சிறுத்தை உயிரிழந்த இடத்தில் உயிரிழந்த நிலையில் நாய் ஒன்றின் உடற்பாகங்களும் இருந்துள்ளன.

 குறித்த தேயிலை மலையில் தொழில் செய்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் சிறுத்தையொன்று உயிரிழந்த நிலையில் கிடப்பதை அவதானித்து, திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கு  தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவத்தை அறிந்து ஸ்தலத்திற்கு விரைந்துள்ள திம்புள்ள பத்தனை பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, குறித்த சம்பவம் தொடர்பாக வனவிலங்கு பாதுகாப்பு சபைக்கு அறிவித்துள்ளதையடுத்து உயிரிழந்த சிறுத்தையை மரண பரிசோதனை செய்வதற்காக பொறுப்பேற்று வனவிலங்கு அதிகார சபைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இத்தோட்டத்தில் சில மாதங்களுக்கு மேலாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதுடன் லயன் குடியிருப்பு பகுதிகளுக்கும் சிறுத்தைகள் வந்து சென்றுள்ளதாகவும், காவலுக்காக வளர்க்கப்படுகின்ற நாய்களையும் குறித்த சிறுத்தைகள் வேட்டையாடி உண்ணுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.