
வெற்று சலசலப்புக்கெல்லாம் தி.மு.க. நடுங்கி, ஓடிவிடாது என்றும் மிசாவையே பார்த்து மிரளாத இயக்கம் தி.மு.க. என்பது நரேந்திர மோடிக்கு புரியாது என்றும் துரைமுருகன் வீட்டில் நடந்த வருமானவரித்துறை சோதனை குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் அமைச்சரும், தி.மு.க. பொருளாளருமான துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ளதற்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பா.ஜ.க. தலைமையிலான அ.தி.மு.க. கூட்டணி படுதோல்வி அடையும் என்று வெளிவரும் சர்வே முடிவுகளும், மத்திய உளவுத்துறை அதிகாரிகளின் அறிக்கைகளும் பிரதமர் நரேந்திரமோடிக்கு எரிச்சலையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஆகவே ஆணவத்தின் உச்சகட்டமாக பிரதமர் நரேந்திரமோடியே நேரடியாகத் தலையிட்டு தி.மு.க. மீது வருமானவரித்துறை ரெய்டு நடத்த உத்தரவிட்டிருப்பது காட்டு மிராண்டித்தனமான அதிகார துஷ்பிரயோகம்.
இந்த பாசிஸ்ட் பாய்ச்சலையும், சேடிஸ்ட் சேட்டையையும் பார்த்து தி.மு.க. ஒருக்காலும் ஒய்ந்துவிடாது. இது பனங்காட்டு நரி, இந்த வெற்று சலசலப்புக்கெல்லாம் நடுங்கி ஓடிவிடாது. மிசாவையே பார்த்து மிரளாத இயக்கம் தி.மு.க. என்பதை பாவம் புதிதாகப் பிரதமர் பதவியைப் பார்த்து அதில் பித்தம் கொண்டிருக்கும் நரேந்திரமோடிக்குப் புரியாது.
தி.மு.க.வின் மடியில் கனமில்லை, தி.மு.க.வின் பயணத்தில் எப்போதும் பயம் என்பது ஏற்பட்டதில்லை. விரைவில் பிரதமர் பதவியிலிருந்து, ஜனநாயக தேர்தலில் வெளியேற்றப்படும் பிரதமர், மூழ்கும் கப்பலில் இருந்து எப்படியாவது தப்பித்து விட முடியுமா என்ற நினைப்பில் கடைசி நிமிட வருமான வரித்துறை ரெய்டுகளை தி.மு.க.வின் மீதும், நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளின் மீதும் நடத்துகிறார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி தலைமையில் இருக்கும் அமைச்சரவையில் உள்ளவர்கள் மீது இதுவரை பல ரெய்டுகளை நடத்தி அவர்களிடம் பேரம் பேசி கூட்டணி வைத்து விட்டு, இப்போது தி.மு.க. பக்கம் திரும்பியிருக்கிறார் நரேந்திரமோடி. மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு இப்போது ஒரு காபந்து சர்க்கார்! ஆகவே இந்த காபந்து பிரதமரின் அதிகாரத்திற்கு, சுதந்திரமான அமைப்புகள் கைகட்டி வாய்பொத்தி நிற்பது மகா கேவலமான நிலைமை.
ஹிட்லர் பாணி அரசியலை, 130 கோடி மக்களைக் கொண்ட வலிமைமிக்க இந்திய ஜனநாயகம் ஒருபோதும் ஏற்காது, அதை மன்னிக்காது. உரிய கடுமையான பாடத்தை நடைபெறுகின்ற 17-வது நாடாளுமன்றத் தேர்தலில் காபந்து பிரதமராக இருக்கும் நரேந்திரமோடிக்கு இந்திய மக்கள் நிச்சயம் கற்பிப்பார்கள். அதற்குள் தேர்தலில் நேரடியாக தி.மு.க.வுடன் மோதத் துணிச்சல் சிறிதும் இல்லாத பா.ஜ.க. இப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு காவலாளியாக நின்று, திரைமறைவில் இருந்து கொண்டு, தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் வருமானவரித்துறை ரெய்டை நடத்தியிருக்கிறது. இந்த ரெய்டு பயமுறுத்தலுக்கு எல்லாம் தி.மு.க. என்றைக்கும் அஞ்சாது என்பதை பிரதமர் நரேந்திரமோடிக்கும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்ற அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் பொருந்தும் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும். பண வினியோகத்தைத் தடுக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் நோக்கமாக இருந்தால், தேர்தல் காலத்தில் இந்த அமைப்புகள் எல்லாம் காபந்து பிரதமரின் தலைமையில் இயங்க தடை விதித்து, உச்சநீதிமன்றத்தலைமை நீதிபதியின் நேரடிப் பார்வையில் செயல்படுவதற்கான வழி முறைகளைக் கண்டிட இந்திய தேர்தல் ஆணையமே ஆராய்ந்து பார்த்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

