போலி நாணயத்தாள்களுடன் நான்கு பேர் கைது

252 0

போலி நாணயத்தாள்கள் அச்சிடும் இடமொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், அங்கிருந்த நால்வரை சந்தேகநபர்களாக கைது செய்துள்ளனர்.

கிரிபத்கொட பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் 1,000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் 05 மற்றும் 500 ரூபாய் போலி நாணயத்தாள்கள் 03 உடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின்படி போலி நாணயத்தாள்களை அச்சிட்ட நபர் அவற்றை மாற்றுவதற்காக வழங்கியுள்ளமை தெரிய வந்துள்ளது. 

இதனையடுத்து களணி-திப்பிடிகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்று சுற்றிவளைக்கப்பட்டு 1,000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் 27 உம், 500 ரூபாய் நாணயத்தாள்கள் 4 உம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், போலி நாணயத்தாள்களை அச்சிட காரணமாக இருந்த பிரதான சந்தேகநபரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேகநபர்களிடமிருந்து போலி நாணயத்தாள்களை அச்சிடப் பயன்படுத்திய கணனி உள்ளிட்ட மேலும் பல உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.