ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள புதிய பிரேரண எதிர்வரும் 21 ஆம் திகதி வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படவுள்ளது.
இந்தப் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கவுள்ளதாக இலங்கையும் அறிவித்துள்ள நிலையில் பிரேரணை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கை தொடர்பான பிரேரணை பிரிட்டன், ஜேர்மன், கனடா உள்ளிட்ட ஐந்து நாடுகளினால் முன்வைக்கப்பட்டன. அதன்படி அந்த பிரேரணை 21 ஆம் திகதிவிவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு பின்னர் நிறைவேற்றப்படும். பிரேரணையை நிறைவேற்றும்போது அதனை சமர்ப்பித்த நாடுகளும் இலங்கையும் உரையாற்றவுள்ளன.
தற்போதுவரை இந்தப் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்குவதாக பல நாடுகள் அறிவித்துள்ளன. அல்பேனியா, அவுஸ்திரேலியா, ஒஸ்ரியா, பெல்ஜியம், பல்கேரியா, கனடா, குரோஷியா, டென்மார்க், பிரான்ஸ், கிரீஸ், இத்தாலி நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே, இலங்கை , சுவீடன் உள்ளிட்ட பல நாடுகள் இந்தப் பிரேரணைக்கு அனுசரணை வழங்குவதாக அறிவித்துள்ளன.