வெளியுறவு அமைச்சர் தலைமையில் ஒரேயொரு குழுவே ஜெனீவா செல்லும்!

269 0

தற்போது ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் பேரவையின் 40 வது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு இலங்கையின் சார்பில் வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான ஒரேயொரு குழுவே பங்கேற்கும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் திலக் மாரப்பனவும் வேறு உயரதிகாரிகளும் நேற்று முன்தினம் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. 

ஜனாதிபதியினால் ஜெனீவாவுக்கு தனியாக அனுப்பப்படவிருந்த குழுவின் உறுப்பினர்களான முன்னாள் அமைச்சர்  சரத் அமுனுகமவும் வடமாகாண ஆளுநர் சுரேன் இராகவனும் இந்த குழுவில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். 

ஜனாதிபதியின் குழுவின் இன்னொரு உறுப்பினரான முன்னாள் அமைச்சர் மகிந்த சமரசிங்க வாபஸ் பெற்றிருக்கிறார். தனது வாபஸ் குறித்து நேற்று பாராளுமன்றத்தில் சமரசிங்க அறிவித்தார்.

இறுதியாக எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான குழுவில் கலாநிதி சரத் அமுனுகம, சுரேன் இராகவன், வெளியுறவு அமைச்சின் செயலாளர் ரவிநாதஆரியசிங்க மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஏ.நெரின் புள்ளே ஆகியோர் அங்கம் வகித்து ஜெனீவா செல்கின்றனர்.

ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிகளாக ஜெனீவாவுக்கு அனுப்பப்படவிருந்த குழுவில் இருந்து வாபஸ் பெறுவதை பாராளுமன்றத்தில் அறிவித்த மகிந்த சமரசிங்க உத்தியோகபூர்வக் குழு ஜெனீவா செல்வதற்கு முன்னதாக உண்மைநிலையைக் கண்டறியும் நோக்குடன் ஜெனீவாவுக்குச் செனறு நாடு திரும்பியிருப்பதாகவும் ஜனாதிபதியைச் சந்தித்து அவரின் பிரதிநிதிகள் குழுவில் இருந்து விலகும் தனது முடிவை தெரியப்படுத்தியதாகவும் சமரசிங்க கூறினார்.