அரசியல் தீர்வை எட்டாது நாட்டை கட்டியெழுப்ப முடியாது – சம்பந்தன்

271 0

இந்த நாட்டில் அரசியல் தீர்வை எட்டாது ஒருபோதும் நாட்டினை  கட்டியெழுப்ப முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வரவுசெலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

அவர் மேலும் கூறுகையில், 

அரசியல் தீர்வுகளுக்காக இதுவரை நாம் முன்வைத்த யோசனைகளையும் கையாண்ட முயற்சிகளையும்  குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு மீண்டும் நாட்டில் ஒரு மோதலை  உருவாக்கப்போகின்றோமா அல்லது இதுவரை எடுத்த முயற்சிகளை கொண்டு தீர்வை நோக்கி பயணிக்கப்போகின்றோமா என்பதை ஆட்சியாளர்கள் தீர்மானிக்க வேண்டும். 

மைத்திரி -ரணில் -மஹிந்த மூவருமே அதியுச்ச அதிகாரப பகிர்வை முன்னெடுப்பதாக கூறியும் இன்றுவரை தீர்வு கிடைக்கவில்லை.

அத்துடன் நாட்டில் 25 வருடகால யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் நாடக இன்னமும் முன்னேற முடியாதுள்ளது. எம்மைப்போல உலகத்தில் பல நாடுகள் நெருக்கடியான சூழலில் இருந்து அபிவிருத்தியடைந்துள்ளனர்.  

எமது நாட்டுக்கும் அவ்வாறான வாய்ப்புகள் இருந்தன.  சர்வதேச சமூகம் எமக்கு உதவியாக இருக்கும் என நாம் நம்புகின்றோம். ஏனெனில் இந்த நாடு ஒரு ஜனநாயக நாடு என்ற நம்பிக்கை சர்வதேசத்திடம் உள்ளது. ஆகவே அவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஜனநாயகத்தை பலப்படுத்த வேண்டியது மட்டுமே எமக்குள ஒரே இலக்காக உள்ளது. 

எனவே இதனை வெற்றிகொள்ள நாம் என்ன செய்ய வேண்டும். எம்மத்தியில் பாகுபாடு இல்லாது  தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் அனைவரும் ஒரேமாதிரி நடத்தப்பட வேண்டும். சுதந்தரம் பெற்று 70 ஆண்டுகளை கடந்தும் நாம் முரண்பாடுகளுடன் செயற்பட முடியாது. பிரிவினையுடன் இருக்க முடியாது. ஆளுகை பகிரப்பட வேண்டும். எல்லா மக்களும் சமத்துவமாக இருக்க வேண்டும், இலங்கை அனைவருக்கும்  சொந்தமானது என்ற உணர்வு இருக்க  வேண்டும். பல இன கலாசாரா பன்மைத்துவ சமூகம் என்ற உணர்வு இருக்க வேண்டும். உலகில் வளர்சிகண்ட  அனைத்து நாடுகளும் இதனையே கையாண்டுள்ளது. ஆகவே நாமும் அதனையே செய்ய வேண்டும் என்றார்.