பாதீட்டில் ஜனாதிபதிக்கான நிதியொதுக்கீடுகளை எதிர்ப்போம்- முஜிபுர் ரஹ்மான்

247 0

எதிர்வரும் 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு, செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி செயலகம், அவரது அமைச்சு என்பவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கு நாங்கள் எதிராக வாக்களிப்போம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாங்கள் ஒன்றிணைந்தே பதவியில் அமர்த்தினோம். அவருடன் இணைந்து அரசியல் பயணத்தை முன்னெடுத்ததுடன், நாட்டில் பல்வேறு மாற்றங்களையும் மேற்கொண்டிருக்கின்றோம். 

ஆனாலும் கடந்த ஒக்டோபர் மாதம் எமக்கும், அவருக்கும் எதிராக இருந்த அரசியல் அணியுடன் இணைந்து இந்நாட்டில் அரசியல் மாற்றமொன்றினை ஏற்படுத்துவதற்கன முயற்சியினை மேற்கொண்டார். 

ஆனால் அந்த முயற்சி நீதிமன்றத்தால் தோற்கடிக்கப்பட்டதுடன், நாங்கள் மீண்டும் எம்முடைய அரசாங்கத்தை உருவாக்கினோம்.

ஆனாலும் ஜனாதிபதி தற்போது ஐக்கிய தேசியக்கட்சி, ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் அதன் தலைவர்களை தாக்கும் வகையிலான கருத்துக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றார். 

எனவே எதிர்வரும் 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு, செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதியின் அமைச்சு உள்ளிட்டவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கு நாங்கள் ஆதரவளிக்கப் போவதில்லை என்றார்.