வெளிநாட்டுக்கு தப்பி சென்ற நபருககு பகிரங்கப் பிடியாணை!

256 0

கஞ்சா போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றப் பிணையில் விடுவிக்கப்பட்டு வெளிநாட்டுக்கு தப்பித்த நபரைக் கைது செய்ய பகிரங்கப் பிடியாணை உத்தரவை வழங்கியது யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம்.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் குற்றச்செயல் ஒன்று தொடர்பில் நீதிமன்றப் பிடியாணை உத்தரவில் சந்தேகநபரைக் கைது செய்வதற்கு சென்ற பொலிஸார், அவரிடமிருந்து 2 மில்லிக் கிராம் கஞ்சா போதைப்பொருளைக் கைப்பற்றினர்.

அவரிடம் கஞ்சா மீட்கப்பட்ட வழக்கை பொலிஸார் தனியாகத் தாக்கல் செய்தனர். அந்த வழக்கிலும் அவருக்கு பிணை வழங்கப்பட்டது. எனினும் சந்தேகநபர் கடந்த பல வழக்குத் தவணைகளுக்கு மன்றில் முன்னிலையாகவில்லை.

இதனால் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில்  பிணையாளிகளுக்கு அழைப்புக் கட்டளை வழங்கப்பட்டது.

சந்தேகநபருக்கு எதிரான வழக்கு நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. பிணையாளிகள் மன்றில் தோன்றினர்.

இந்நிலையில் குறித்த சந்தேகநபர் வெளிநாடு சென்றுவிட்டதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது. அதனால் அவரைக் கைது செய்ய பகிரங்கப் பிடியாணை பிறப்பித்த நீதிவான் ஏ.எஸ்.பி.போல், வழக்கை ஒத்திவைத்தார்.