மைத்திரி -மஹிந்த இணக்கத்தில் வெற்றிபெறக்கூடியவரே ஜனாதிபதி வேட்பாளர்- அமரவீர

249 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இணக்கத்தில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் களமிறக்கப்படுவார். எவ்வாறு இருப்பினும் வெற்றிபெறக்கூடிய ஒருவரையே களமிறக்குவோம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கும் நபர் குறித்து கட்சிக்குள் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் அது குறித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிகுள்ளோ அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குள்ளோ எந்தவித முரண்பாடுகளும் இல்லை.

இரண்டு கட்சிகளும் இணைந்து பயணிப்பதில் எந்த நெருக்கடியும் இல்லை. கட்சிகள் இரண்டாக இருந்தாலும் கூட நாம் அனைவருமே நீண்ட காலமாக ஒரு அணியாக செயற்பட்டவர்கள். 

ஆகவே எமக்குள் எந்த முரண்பாடுகளும் இல்லை. அதேபோல் ஜனாதிபதி தேர்தல் குறித்து கட்சிக்குள் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கபட்டு வருகின்றது. பொருத்தமான நபர் குறித்து ஆராயப்பட்டு வருகின்றது. 

நாம் களமிறக்கும் நபர் நிச்சயமாக தேர்தலில் வெற்றி பெறக்கூடிய நபராக இருக்க வேண்டும். ஐக்கிய தேசிய கட்சிக்கு சவால் கொடுக்கக்கூடிய ஒருவராக இருக்க வேண்டும் என அவர் மெலும் தெரிவித்தார்.