காசோலை மோசடி வழக்கு,எதிரியை வழக்கிலிருந்து விடுவிக்க தீர்மானம்

242 0

காசோலை மோசடி வழக்கின் முறைப்பாட்டாளர் வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்காமையால் , எதிரியை வழக்கிலிருந்து விடுவிப்பதாகவும் , ஒரு வருட காலத்திற்குள் முறைப்பாட்டாளர் மன்றில் தோன்றினால் மாத்திரமே வழக்கினை மீள தொடர முடியும் என நீதிவான் அறிவுறுத்தியுள்ளார். 

யாழ். பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 4 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் காசோலையை மோசடி செய்யப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்து நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர். 

குறித்த வழக்கு நேற்று புதன்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எஸ்.பி. போல் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது. 

இதன் போது முறைப்பாட்டாளர் மன்றில் முன்னிலையாகவில்லை.என்றும் அவர் வெளிநாடு சென்று விட்டதகாவும் , காசோலை மோசடி தொடர்பாக வங்கி முகாமையாளரின் அறிக்கை பெறப்பட்டு உள்ளதாகவும் , அந்த அறிக்கையினை வைத்து வழக்கினை நடத்த அனுமதிக்க வேண்டும் என பொலிஸார் மன்றில் விண்ணப்பம் செய்தனர். 

அதனை ஆராய்ந்த நீதிவான் , வழக்கின் முறைப்பாட்டாளர் தான் பிரதான சாட்சியாவர். பிரதான சாட்சியாளர் இல்லாமையால் எதிரி வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகின்றார். ஒரு வருட கால பகுதிக்குள் முறைப்பாட்டாளர் மன்றில் தோன்றினால் இந்த வழக்கினை மீள தொடர முடியும் என நீதிவான் கட்டளை பிறப்பித்தார்.